வருமான வரி ரீபண்ட்டை எதிர்பார்த்து காத்திருந்த வரிசெலுத்துவோருக்கு இன்ப அதிர்ச்சி…… ரூ.5 லட்சம் வரை நிலுவையில் உள்ள ரீபண்ட்களை உடனடியாக வழங்க உத்தரவு….
ரூ.5 லட்சம் வரை நிலுவையில் உள்ள வருமான வரி ரீபண்ட்களை உடனடியாக வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் வரி செலுத்துவோரில் சுமார் 14 லட்சம் பேர் பலன் அடைவர்.
கொரோனா வைரஸால் நாடே முடங்கி கிடக்கிறது. மேலும் நாட்டின் பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக மக்கள் மத்தியில் பணம் புழக்கம் கிட்டத்தட்ட நின்று விட்டது. இந்நிலையில் பொதுமக்கள் மத்தியில் பணம் புழக்கம் ஏற்படும் வகையில், வருமான வரி ரீபண்ட், சுங்க மற்றும் ஜி.எஸ்.டி. நிலுவை தொகை உள்பட சுமார் ரூ.18 ஆயிரம் கோடி மதிப்பிலான ரீபண்ட்களை உடனடியாக வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ரூ.5 லட்சம் வரை நிலுவையில் உள்ள வருமான வரி ரீபண்ட்களை வருமான வரி துறை உடனடியாக வழங்க உள்ளது. இதனால் வரி செலுத்துவோர்களில் சுமார் 14 லட்சம் பேர் பலன் அடைவர். மேலும் ஜி.எஸ்.டி. மற்றும் சுங்க வரி ரீபண்ட்களை வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்பட சுமார் 1 லட்சம் நிறுவனங்கள் பலன் அடையும்.
இதுதவிர, டெவலப்பர்ஸ் மற்றும் கட்டுமான நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய அனைத்து நிலுவை தொகைகளை வழங்க என்.எச்.ஏ.ஐ.க்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தனியாக உத்தரவிட்டுள்ளார்.