வடிவேலுவின் மிரட்டல்… அல்வா வாசுவின் மரணம்… குடியிலிருந்து மீண்ட நடிகர் முத்துக்காளை உருக்கம்

 

வடிவேலுவின் மிரட்டல்… அல்வா வாசுவின் மரணம்… குடியிலிருந்து மீண்ட நடிகர் முத்துக்காளை உருக்கம்

வடிவேலுவின் மிரட்டல் மற்றும் சக நடிகர் அல்வா வாசுவின் மரணம் தான் தன்னை குடி பழக்கத்திலிருந்து மீண்டுவர உதவியது என்று நகைச்சுவை நடிகர் முத்துக்காளை கூறியுள்ளார்.

muthu

நகைச்சுவை நடிகர் வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் நடித்தவர் முத்துக்காளை. கோழி 65 மருத முத்துக்காளை என்றால் அனைவருக்கும் தெரியும். தீவிர குடி பழக்கம் கொண்டவராக இருந்த இவர் தற்போது ஓராண்டாக மதுவைத் தொடவில்லை என்று பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும் அதில், “நான் சினிமா ஸ்டண்ட் கலைஞன் ஆக வேண்டும் என்று சென்னை வந்தேன். வந்த இடத்தில் வாய்ப்புகள் கிடைக்காததால் கார்பெண்டர் வேலைக்கு சென்றேன். ஆனாலும் பட வாய்ப்புக்காக தேடிக்கொண்டே இருந்தேன். அப்போதுதான் நடிகர் வடிவேலு கூட்டணியில் இடம் கிடைத்தது.

vadivelu

போண்டா மணி, அல்வா வாசு என ஒரு குழுவாக திரிந்தோம். சின்ன சின்ன வேடங்களில் நடித்துக்கொண்டிருந்த போது எனக்கு மதுப் பழக்கம் அறிமுகம் ஆனது. நானும் அல்வா வாசுவும் அதிக அளவில் மது அருந்துவோம். யார் என்ன சொன்னாலும் நாங்கள் அதைப் பொருட்படுத்தியது இல்லை. அப்போதுதான் எங்களை வடிவேலு கண்டித்தார். என்னிடம் முதலில் அல்வா வாசு சாகப்போறான், அடுத்து நீதான்னு எச்சரித்தார். ஆனால், அதை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் வழக்கம்போல குடித்தோம். வடிவேலு கூறியதுபோல உடல்நலக் குறைவு காரணமாக அல்வா வாசு திடீரென்ற ஒருநாள் இறந்துவிட்டார்.

alwa

அப்போதுதான் என் மனதுக்குள் ஒருவித பயம் வந்தது. இப்படியே இருந்தால் வாழ்க்கை என்னாகும் என்ற பயம் ஏற்பட்டதால் குடியை நிறுத்திவிட்டேன். மதுவைத் தொட்டு ஓராண்டு ஆகப்போகிறது… இப்போது தெளிவாக ஆரோக்கியமாக இருக்கிறேன். சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறேன். இனி மதுவைத் தொடவே மாட்டேன்” என்றார்.