‘வடசென்னை’ படத்தில் முதலிரவு காட்சி நீக்கப்படும்: வெற்றிமாறன்

 

‘வடசென்னை’ படத்தில் முதலிரவு காட்சி நீக்கப்படும்: வெற்றிமாறன்

‘வடசென்னை’ படத்தில் கப்பலில் இடம்பெற்ற முதலிரவு காட்சிகள் 10 நாட்களுக்குள் நீக்கப்படும் என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

சென்னை: ‘வடசென்னை’ படத்தில் கப்பலில் இடம்பெற்ற முதலிரவு காட்சிகள் 10 நாட்களுக்குள் நீக்கப்படும் என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ வெற்றியைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘வடசென்னை’ திரைப்படம் வெளியானது. வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலை பேசும் இப்படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில், படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் மீனவ சமுதாயத்தை இழிவுப்படுத்தும் விதமான காட்சிகள் இருப்பதாக சர்ச்சை எழுந்தது.

மேலும், பார்வையாளர்கள் மனம் புண்படும்படியாக ஆபாச வார்த்தைகள் பேசப்பட்டிருப்பதாக சமூக நீதி வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இயக்குநர் வெற்றிமாறன் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இயக்குநர் வெற்றிமாறன் தனது தரப்பு விளக்கத்தை வீடியோ பதிவாக பகிர்ந்துள்ளார். அதில், சில காட்சிகள் மீனவ சமுதாயத்தினரின் மனம் புண்படும் விதமாக இருப்பதாக சில அமைப்புகள் கூறுவதை கேள்விபட்டேன். எந்த ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு எதிராக சினிமாவோ அரசியலோ செய்யும் நோக்கமல்ல. குறிப்பாக கப்பலில் நடக்கும் முதலிரவு காட்சி மீனவ மக்களை இழிவுப்படுத்தும் விதமாக உள்ளது என கூறியிருப்பதால் குறிப்பிட்ட காட்சியை நீக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தணிக்கை குழுவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் அதனை திருத்தம் செய்ய உத்தரவு வழங்கியதும், அடுத்த 7-10 நாட்களுக்குள் காட்சி நீக்கப்படும். யாரையும் இழிவுப்படுத்துவதோ, குறைத்து காட்டுவதோ நோக்கம் இல்லை. காட்சிகள் யாரையாவது புண்படுத்தியிருந்தால் வருந்துகிறோம். மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.

மேலும், வடசென்னை 2, 3ம் பாகத்திலும் அந்த பகுதி மக்களின் வாழ்வாதார பிரச்னை, அவர்கள் சந்திக்கும் நெருக்கடிகள் குறித்து விவாதிப்பதும், அப்பகுதி இளைஞர்கள் வெவ்வேறு துறைக்கு சென்று நெருக்கடிகளில் இருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பது குறித்து படமாக்கப்பட உள்ளது எனவும் விளக்கமளித்துள்ளார்.