வகுப்பறையில் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியர்: மதுபோதையில் பள்ளிக்கு வந்த அவலம்!
மதுபோதையில் நான்கு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியரைப் பொதுமக்கள் அடித்து உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம்: மதுபோதையில் நான்கு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியரைப் பொதுமக்கள் அடித்து உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மேலகோண்டூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் முருகனும், ஆசிரியை உமாவும் கல்வி கற்றுக் கொடுக்கின்றனர்.
பொறுப்பாசிரியராக வந்த மைக்கேல் காந்திராஜ்
இந்நிலையில் முருகன் மருத்துவ விடுப்பில் உள்ள நிலையில், ஆசிரியை உமா நாடாளுமன்ற தேர்தல் சம்பந்தமாகத் திருக்கோவில் நடைபெற்று வரும் பயிற்சிக்குச் சென்றுவிட்டார். இதனால் அருகில் உள்ள ஊரில் ஆசிரியராக பணியாற்றி வந்த, மைக்கேல் காந்திராஜ் என்பவர் பள்ளிக்கு ஒரு நாள் பொறுப்பாசிரியராக வந்திருந்தார். அவர் மதுபோதையிலிருந்ததாக கூறப்படுகிறது.
மாணவிகளிடம் சில்மிஷம்
இதையடுத்து மதிய உணவு இடைவேளையின்போது ஆசிரியர் மைக்கேல் காந்திராஜ் பள்ளியிலேயே 4 மற்றும் ஐந்தாம் வகுப்பு படிக்கும் 4 மாணவிகளை ஒரு வகுப்பு அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் அழுது கொண்டே தங்கள் வீடுகளுக்குச் சென்று பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.
சிறை வைத்த பொதுமக்கள்
இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் கிராம மக்கள் பள்ளிக்குள் புகுந்து மைக்கேல் காந்திராஜை அடித்து உதைத்து வகுப்பறையில் சிறை வைத்தனர். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மைக்கேல் காந்திராஜை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிருப்தி
பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்முறை நாடெங்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறி வருவது சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.