லோனில் வாங்கின வண்டி கடனை அடைக்க கஸ்டமரை கொன்ற ஓலா டிரைவர்!

 

லோனில் வாங்கின வண்டி கடனை அடைக்க கஸ்டமரை கொன்ற ஓலா டிரைவர்!

பெங்களூரு விமான நிலையத்தின் பின்வாசல் பக்கமாக முகம் கொடூரமாக சிதைக்கப்பட்ட பெண்ணின் உடல் கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைக்கிறது. உடனடியாக களத்தில் இறங்கிய காவலர்களுக்கு கொலை செய்யப்பட்ட பெண் யார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. கொலை செய்யப்பட்டவரே யார் என்று தெரியாதபோது கொலையாளி யார் என்பதை கண்டுபிடிக்க முடியுமா? முடியும். முடிந்திருக்கிறது. அப்பெண்ணின் கழுத்தில் ஒரு டாட்டூ இருந்திருக்கிறது. கழுத்து டாட்டூ, அவர் அணிந்திருந்த உடை என இந்த இரண்டு க்ளூக்களை மட்டும்கொண்டு வேகம் எடுத்தனர். காணாமல் போன பெண்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு உடனடியாக டெல்லி மற்றும் மேற்கு வங்கத்திற்கு தனிப்படைகள் அனுப்பி விசாரித்தனர். விசாரணையில் கொல்கத்தாவைச் சேர்ந்த பூஜா சிங் டே என்ற மாடல் காணாமல் போனதாக அவரது கணவர் அளித்திருந்த அடையாளங்களோடு, கொல்லப்பட்டவரின் அடையாளம் ஒத்துப்போகவே, உறவினர்களை உடனடியாக அழைத்துவந்து அடையாளம் காட்டி உடலை பெற்றுச்சென்றிருக்கிறார்கள்.

ரைட். பாதி கிணறு தாண்டியாகிவிட்டது. இனிமேல் எல்லாம் சுலபமாக பிடிபடும் என்பதை காவலர்கள் உணர்ந்துவிட்டனர். பூஜாவின் இமெயில், எஸ்.எம்.எஸ். என எல்லாவற்றையும் சோதித்ததில், கடைசியாக பெங்களூரு விமான நிலையத்திற்கு ஓலா டேக்ஸி புக் செய்ததற்கான கன்ஃபர்மேஷன் இமெயில் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 75% கேஸ் ஃபினிஷ்ட். தொடர்விசாரணையில் 22 வயதான ஓலா டிரைவர் நாகேஷ்தான் பூஜாவை கொன்றான் என்பதும் தெரியவர 100% கேஸ் சால்வ்ட். கடனில் வாங்கிய வண்டிக்கு மாதத்தவணை செலுத்த காசில்லாததால், புக் பண்ணிய வாடிக்கையாளரையே கொலைசெய்து பணத்தை கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டிருக்கிறான் நாகேஷ்.