லேட்டா வரவங்களுக்கு தோனி கொடுக்கும் தண்டனை இது தானாம்: வியப்பில் ரசிகர்கள்!?
தாமதமாக வரும் வீரர்களுக்கு தோனி வழங்கும் தண்டனை குறித்த தகவலை இந்திய அணியின் முன்னாள் மனநல ஆலோசகர் பேடி அப்டான் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா: தாமதமாக வரும் வீரர்களுக்கு தோனி வழங்கும் தண்டனை குறித்த தகவலை இந்திய அணியின் முன்னாள் மனநல ஆலோசகர் பேடி அப்டான் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தனது தனி திறமையால் ரசிகர்களின் மனதை வென்றவர். இரண்டு முறை இந்திய அணிக்காக உலகக்கோப்பையை வென்று கொடுத்தவர் தோனி. தற்போது கேப்டன் பொறுப்பிலிருந்து விலகி இந்திய அணியின் விக்கெட் கீப்பராக தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அதே போல் அணியின் மற்ற வீரர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை, உரிய நேரத்தில் வழங்கி வருகிறார்.
இந்நிலையில் கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் , இந்திய அணியின் முன்னாள் மனநல ஆலோசகர் பேடி அப்டான் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் தோனி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய பேடி அப்டான், ‘ தோனியின் மிகப்பெரிய பலமே அவரது அமைதி தான். பல கடினமான சூழ்நிலைகளில் வீரர்களை அமைதியாக வழி நடத்துவார். நான் மனநல ஆலோசகராக இந்திய அணியில் சேரும் போது நடந்த சம்பவத்தை இங்கு நினைவு கூற நினைக்கிறேன். டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக அனில் கும்ப்ளேவும், ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக தோனியும் இருந்தனர். அப்போது பயிற்சிக்குத் தாமதமாக வரும் வீரர்களுக்கு என்ன தண்டனை அளிக்க வேண்டும் என்பது குறித்து எங்கள் ஆலோசனை இருந்தது.
அப்போது கும்ப்ளே தாமதமாக வரும் வீரர்களுக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கலாம் என்றார். ஆனால் தோனியோ வீரர் ஒருவர் தாமதமாக வந்தால் கூட, அணியில் உள்ள அனைவருக்கும் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கலாம் என்று அதிரடியாகக் கூறினார். இந்த அறிவிப்புக்குப் பிறகு அணியில் யாரும் தாமதமாக வந்தது இல்லை’ என்று சிரித்து கொண்டே தோனி குறித்து மனம் திறந்தார் பேடி அப்டான்.