லாரி மோதி விபத்து.. தந்தை கண்முன்னே உயிரிழந்த சிறுவன் : உறவினர்கள் போராட்டத்தால் பரபரப்பு!
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்துள்ள துட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில். இவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்துள்ள துட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில். இவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். இன்று காலை செந்தில், சிறுவர்களைப் பள்ளியில் விடுவதற்காகச் சென்றுள்ளார். அப்போது, பின்னால் வந்த லாரி ஒன்று இவர்கள் சென்று கொண்டிருந்த பைக் மீது மோதியுள்ளது. அதில் மூவரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த செந்திலின் மகன் கதிர்வேல்(8) சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் லாரியை வழிமறித்து அதிலிருந்த பிரிட்டானியா நிறுவனத்தின் பல லட்சம் மதிப்பிலான பொருட்களை ஏரியில் கொட்டியுள்ளனர். மேலும், லாரியின் டயர்களை தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். இதுமட்டுமில்லாமல் அந்த வழியே வந்த அரசு பேருந்துகளின் கண்ணாடியையும் உடைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த விபத்து குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனையடுத்து சிறுவனின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.