லண்டனில் சொகுசு வாழ்க்கை வாழும் நிரவ் மோடி: வெளியான வீடியோ!

 

லண்டனில் சொகுசு வாழ்க்கை வாழும்  நிரவ் மோடி: வெளியான வீடியோ!

பஞ்சாப் நேஷனல் வங்கி நிதி மோசடியில் குற்றம்சாட்டப்பட்டுள்ள வைர வியாபாரி நிரவ் மோடி, லண்டனில் புதிய வைர வியாபாரத்தைத் துவங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

லண்டன் : பஞ்சாப் நேஷனல் வங்கி நிதி மோசடியில் குற்றம்சாட்டப்பட்டுள்ள வைர வியாபாரி நிரவ் மோடி, லண்டனில் புதிய வைர வியாபாரத்தைத் துவங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ரூ.11 ஆயிரத்து 600 கோடிக்கும் அதிகமாக சட்டவிரோத பரிவர்த்தனையும், ரூ.280 கோடி மோசடி செய்ததாகவும் குஜராத்தை சேர்ந்த வைர நகை வியாபாரி நிரவ் மோடி மீது பஞ்சாப் நேஷனல் வங்கி புகார் அளித்துள்ளது. இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், ஜனவரி மாத தொடக்கத்திலேயே, நிரவ் மோடி, அவரின் மனைவி, சகோதரர் ஆகியோர் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்று விட்டனர். அவர்களைத் தேடப்படும் குற்றவாளிகளாக மத்திய அரசு அறிவித்துள்ளது.  

இந்நிலையில் நிரவ் மோடி லண்டனில் இருப்பதற்கான வீடியோ ஆதாரங்கள் கிடைத்துள்ளது. லண்டன் டெய்லி டெலிகிராப் என்ற செய்தி நிறுவனம் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான நிரவ் மோடி லண்டனில் ஆக்ஸ்போர்ட் தெரு அருகே உள்ள 8 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் ரூ.62.5 கோடி) மதிப்பிலான சொகுசு பங்களாவில் வாழ்ந்து வருவதாகவும், இந்த பங்களாவின் மாத வாடகை 17,000 யூரோ (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.13 லட்சம்) என்றும் குறிப்பிட்டுள்ளது. சோகோவில் புதிய வைர வியாபாரம் ஒன்றை அவர் துவங்கி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

டெய்லி டெலிகிராப் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், நிரவ் மோடி சற்று குண்டான தோற்றத்துடன், மீசை வைத்துக் கொண்டு , சர்வ சாதாரணமாகத் தனது சிறிய நாயை கூட்டிக் கொண்டு , தனது சொகுசு பங்களாவிலிருந்து அருகில் இருக்கும் தனது அலுவலகத்திற்கு வாக்கிங் சென்று வருவது பதிவாகியுள்ளது.