ரேஷன் பொருட்கள், உதவித்தொகை, அரசு, தனியார் ஊழியர்களுக்கு ஒரு மாத சம்பளம்! – ஸ்டாலின் வலியுறுத்தல்

 

ரேஷன் பொருட்கள், உதவித்தொகை, அரசு, தனியார் ஊழியர்களுக்கு ஒரு மாத சம்பளம்! – ஸ்டாலின் வலியுறுத்தல்

கொரோனா அச்சத்தை எதிர்கொள்ள தடை உத்தரவு பிறப்பிப்பதுடன், ஏழை எளிய மக்களுக்கு ரேஷனில் பொருட்கள் கிடைப்பதையும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஒரு மாத சம்பள உதவித் தொகையும், அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு ஒரு மாத சம்பளமும் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா அச்சத்தை எதிர்கொள்ள தடை உத்தரவு பிறப்பிப்பதுடன், ஏழை எளிய மக்களுக்கு ரேஷனில் பொருட்கள் கிடைப்பதையும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஒரு மாத சம்பள உதவித் தொகையும், அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு ஒரு மாத சம்பளமும் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

minister-vijayabaskar

இது தொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“உலகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ‘கொரோனா’ வைரஸால் தமிழக அரசின் புள்ளிவிவரப்படி 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற தகவல் பேரதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ‘தனிமைப்படுத்தப்பட்டு’ கண்காணிக்கப்படுகிறார்கள். இந்திய அளவில் உள்ள 75 மாவட்டங்களில் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களிலும் அத்தியாவசியத் தேவைகள் மட்டும் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதும் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நேரத்தில் அரசு முழு வீச்சில் களமிறங்கி – மக்களுக்கு நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

tn-borders-lockdown

‘தனிமைப்படுத்துவது’ மட்டுமே இந்த நோய் அதிகம் பரவாமல் தடுக்கும். எனவே, அத்தியாவசியத் தேவைகள் தவிர வேறு எதற்காகவும் வீட்டை விட்டு வெளியில் செல்வது, வெளியிடங்களுக்குப் போவது, கூடுவதை சுயமாகத் தவிர்த்தல் ஆகியவை மூலம் நாம் இந்த நோய்க்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற்றுவிட முடியும் என்பதில் சந்தேகமில்லை.
கொரோனா நோய் விவகாரத்தில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும், முதல் கேஸ் ரிப்போர்ட் ஆனதிலிருந்து இன்றுவரை பாதிக்கப்பட்டுள்ள நகரங்களை, மாநகரங்களைத் தனிமைப்படுத்துவதில் தமிழக அரசு இன்னும் வேகமாகச் செயல்படாதது கவலையளிக்கிறது.
“சட்டமன்றத்தை நடத்துவேன்” என்று பிடிவாதம் பிடித்ததும்; பள்ளித்தேர்வுகளை தொடர்ந்து நடத்துவதும் ஒரு பொறுப்பான அரசுக்கு அழகல்ல! கல்வி நிலையங்களை மார்ச் 31-ம் தேதிவரை மூடினாலும் – தேர்வுகள் வைத்து மாணவர்களையும், ஆசிரியர்களையும் பணிக்கு அழைத்தது தவறான அணுகுமுறை!இவையெல்லாம் அரசின் அலட்சியத்திற்கு ஓர் அடையாளம். இவற்றையெல்லாம் சரிசெய்து கொண்டு தமிழக அரசு தீவிர நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் என இன்னமும்கூட நம்புகிறேன்.
கொரோனா நோய் சிகிச்சையில் ஈடுபட்டுள்ள அனைத்து மருத்துவமனை ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும், பாதுகாப்பில் உள்ள காவல்துறையினருக்கும் முழுப் பாதுகாப்பு கவச உடைகள் கொள்முதல் செய்து கொடுக்கவும், அத்தியாவசியப் போக்குவரத்து தவிர மற்ற அனைத்து போக்குவரத்தையும் ரத்து செய்து நகரங்களை – மாநகரங்களைத் தனிமைப்படுத்திடவும் இனியும் தாமதம் இல்லாமல் நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.

borders-lockdown

அரசின் பரிசோதனை முறையும், உண்மையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் இன்னும் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. இது மக்கள் மத்தியில் ஒரு வித அச்ச உணர்வாக மாறியிருக்கிறது. ஆகவே, ‘அனைவருக்கும் பரிசோதனை’ செய்வதற்கான நடவடிக்கைகளில் அரசு ஆர்வம் காட்ட வேண்டியது அவசியமாகிறது.
‘கொரோனா நோய் பரிசோதனை’ கட்டணமாக 4500 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருப்பது அதிகமாக இருப்பதால் – அந்தக் கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும். மாவட்டந்தோறும் ‘வெண்டிலேட்டர்” வசதியுடன் உள்ள படுக்கைகளை அரசு மருத்துவமனைகளில் அதிகரித்து – ‘தனிமைப்படுத்தும் புதிய மையங்களையும்’ அமைப்பது, தனியார் மருத்துவமனைகளுக்குத் தேவைப்பட்டால் போதிய நிதியுதவி செய்து ‘ஐ.சி.யு’ வசதிகளை அதிகரிப்பது போன்றவை சிறந்த வருமுன் காக்கும் நடவடிக்கையாக அமையும். தேவைப்பட்டால் மாவட்டங்களில் உள்ள பெரிய தனியார் கட்டிடங்களையோ அல்லது கல்லூரிகளையே அரசு முன்கூட்டியே கேட்டுப் பெற்று தயார் நிலையில் வைத்துக் கொள்ளலாம்.
ஆகவே ‘முகக்கவசங்கள்’, ‘முழு பாதுகாப்பு உடை கவசங்கள்’, ‘சோதனை கிட்ஸ்கள்’, ‘வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய ஐ.சி.யூ’க்கள் அமைப்பது ஆகியவற்றில் அரசு போர்க்கால அடிப்படையில் கவனம் செலுத்திட வேண்டும். தற்போது முதலமைச்சர் அறிவித்துள்ள 500 கோடி ரூபாய் நிதியுதவி இதற்கெல்லாம் போதாது. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு எவ்வித நிதியுதவியும் அளிக்கப்படாதது மிகுந்த வேதனையளிக்கிறது.

corona-mask

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் அனைவரும் பாதிக்கப்படாத வகையில் அவர்களுக்கு மாத சம்பளத்தை வழங்குவதை உறுதி செய்து – அமைப்புசாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் ஒரு மாத வாழ்வாதாரத்திற்குத் தேவையான நிதியுதவி, ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வது ஆகியவற்றைத் தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். அதுதான் ‘தனிமைப்படுத்துதல்’ முயற்சிக்கு வலுசேர்க்கும். இதை மனதில் வைத்துத்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எம்.பி.,க்களும், எம்.எல்.ஏ.,க்களும் தங்களது ஒரு மாத சம்பளத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கிட அறிவுறுத்தியிருக்கிறேன்.
இவையெல்லாம் ஒருபுறமிருக்க, பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் கூறியிருப்பது போல் ‘தனிமைப்படுத்துதலை’ பொதுமக்கள் கவனத்துடனும் அக்கறையுடனும் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தனிமைப்படுத்திக் கொள்வதால் இன்னொருவரைக் காப்பாற்ற முடியும் – அதன்மூலம் நம் குடியிருப்பில், ஊரில், நகரில், மாநகரில் உள்ளோரைக் காப்பாற்ற முடியும் – ஒட்டுமொத்தமாகத் தமிழ்நாட்டையும், இந்தியாவையும் கொரோனா நோய்ப் பாதிப்பிலிருந்து வெற்றிகரமாகக் காப்பாற்றி விட முடியும் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து, அதற்கேற்ப செயல்பட்டிட வேண்டும் என்று தமிழக மக்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
சுய ஒழுக்கத்திலும், சுய கட்டுப்பாட்டிலும் இந்தியாவிற்கே வழிகாட்டியாக விளங்கிடும் தமிழக மக்கள் இதில் மிகுந்த எச்சரிக்கையுணர்வுடன் செயல்பட்டு – வீட்டை விட்டு வெளியில் செல்வதைத் தவிர்த்து – ஆங்காங்கே கூட்டம் கூடுவதை அறவே தவிர்த்திட வேண்டும் என்று ஒவ்வொருவரையும் இரு கரம் கூப்பி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.