ரூ. 29 கோடி பரிசு வென்ற இந்தியர்: 21 பேருடன் தொகையை பிரித்து கொண்ட சுவாரஸ்யம்!
நேற்று நடந்த குலுக்கலில் இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீனு ஸ்ரீதரன் நாயர் என்பவருக்கு 15 மில்லியன் திர்ஹாம் பரிசாக விழுந்துள்ளது
துபாய்: பிக் டிக்கெட் லாட்டரி நிறுவனம் நடத்திய குலுக்கலில் 29 கோடி ரூபாய் வென்ற இந்தியரை அந்நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.
துபாய் அபுதாபியில் பிக் டிக்கெட் லாட்டரி நிறுவனம் மிகவும் பிரபலமானது. இதில் மாதந்தோறும் நடக்கும் குலுக்கலில் இதுவரை பல இந்தியர்கள் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர். கடந்த மாதம் இந்த லாட்டரி குலுக்கலில் முகமது பயஸ் என்பவர் ரூ. 23 கோடி பரிசு வென்றார்.
இந்நிலையில் பிக் டிக்கெட் லாட்டரி நிறுவனம் சார்பில் நேற்று நடந்த குலுக்கலில் இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீனு ஸ்ரீதரன் நாயர் என்பவருக்கு 15 மில்லியன் திர்ஹாம் பரிசாக விழுந்துள்ளது. இதன் இந்திய மதிப்பு 28,86,62,884 கோடி ரூபாயாகும்.
ஆனால் பரிசு விழுந்த ஸ்ரீனு ஸ்ரீதரன் நாயரை தொடர்புக்கொள்ள முடியவில்லை. அவருடைய செல்போனுக்கு அழைத்தால் வேறுறொருவர் போனை எடுப்பதாக தெரிகிறது. இதனால் கேரளாவை சேர்ந்த அந்த நபரை பிக் டிக்கெட் லாட்டரி நிறுவனம் தேடி வந்தது.
இந்நிலையில் ஒருவழியாக ஸ்ரீனு ஸ்ரீதரன் நாயரை அந்நிறுவனம் கண்டுபிடித்து விட்டது. துபாயில் பணிபுரிந்து வரும் இவர் கேரளாவின் செங்கானூரை சேர்ந்தவர். இவர் தன்னுடன் வேலைசெய்யும் 21 பேருடன் இணைந்து இந்த லாட்டரியை வாங்கியுள்ளார். இதனால் ஆளுக்கு ரூ.1.32 கோடி என கணக்கில் பரிசு தொகையை பிரித்து கொண்டுள்ளனர்.
இதில் ஸ்ரீனு ஸ்ரீதரன் நாயருடன் சேர்த்து 20 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் , ஒருவர் தமிழகத்தையும், ஒருவர் கர்நாடகாவையும் சேர்ந்தவராம். மேலும் இந்த மகிழ்ச்சியை வரும் வெள்ளிக்கிழமை விடுமுறையில் கொண்டாட உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.