ரூ.21 லட்சம் பணமோசடி புகார்: நடிகர் விஜய் தந்தை எஸ்.ஏ.சி. விளக்கம்!

 

ரூ.21 லட்சம் பணமோசடி புகார்:  நடிகர் விஜய் தந்தை எஸ்.ஏ.சி. விளக்கம்!

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது  பண மோசடி புகார் எழுந்துள்ளதற்கு அவர் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது .  

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது  பண மோசடி புகார் எழுந்துள்ளதற்கு அவர் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது .  

நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான  எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கி தயாரித்த திரைப்படம்  டிராபிக் ராமசாமி.  இப்படத்தின்  தமிழ்நாட்டு ஒளிபரப்பு உரிமம் தருவதாக  பிரம்மானந்தம் சுப்பிரமணியன் என்பவரிடம்  21 லட்சம் ரூபாய்  மோசடி செய்ததாக அவரது நண்பர் மணிமாறன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். 

sac

இந்நிலையில் இதுகுறித்து எஸ்.ஏ.சந்திரசேகரின் கிரீன் சிக்னல் நிறுவனம் சார்பில்  அறிக்கை வெளியாகியுள்ளது. அவை பின்வருமாறு: ‘ 2018-ம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகரின் தயாரிப்பில் டிராபிக் ராமசாமி என்ற படம் தயாரிக்கப்பட்டது. இந்தப் படத்தை கனடா நாட்டைச் சேர்ந்த பிரமானந்த் சுப்பிரமணியன் என்பவர் தமிழ்நாட்டில் வெளியிடும் உரிமையைப் பெற்றிருந்தார். இதற்காக ரூ.20 லட்சம் முன்பணம் கொடுத்து ஒப்பந்தமும் போட்டிருந்தார். ஆனால் ஒப்பந்தப்படி அடுத்த கட்ட பணத்தை பிரமானந்த் சுப்பிரமணியத்தால் தர முடியவில்லை.

sac

பட வெளியீட்டுக்கு சில தினங்களுக்கு முன்பு படம் வேண்டாம் என்று சொன்னார். அதனால் வியாபாரம் சம்பந்தமான முடிவுகள் எடுக்க முடியாமல் தவறினோம். அப்போதெல்லாம் படம் வெளியிடும் தேதியை தயாரிப்பாளர்கள் சங்கமே முடிவு செய்வதாகப் பட வெளியீட்டைத் தள்ளி வைக்கவும் முடியாத நிலை. இந்நிலையில் படம் வேறு விநியோகஸ்தர்களுக்கு விற்கப்பட்டால் பணத்தைத் தந்துவிடுவதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரமாக இருந்தமையால் படத்தை வாங்க யாரும் முன்வரவில்லை. இதனால் எஸ்.ஏ.சந்திரசேகர்  தமிழகமெங்கும் வெளியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டார். இதனால் கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டத்தை சந்தித்தார். ஆனால் இந்தப் படத்தை வாங்குவதற்கோ வெளியிடுவதற்கோ எந்த தொடர்புமே இல்லாத மணிமாறன் கமிஷனர் அலுவலகத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் பணத்தை ஏமாற்றிவிட்டார் என்று புகார் அளித்துள்ளார்.எஸ்.ஏ.சந்திரசேகரின் புகழை கெடுக்கவும், அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தவும் திட்டமிட்டுச் செயலாற்றியிருக்கின்றனர்’ இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது .