ரூ.1.69 லட்சம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்! சென்செக்ஸ் 246 புள்ளிகள் உயர்ந்தது.

 

ரூ.1.69 லட்சம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்! சென்செக்ஸ் 246 புள்ளிகள் உயர்ந்தது.

தொடர்ந்து 5வது நாளாக இன்றும் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 246 புள்ளிகள் உயர்ந்தது.

முன்னணி நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் சிறப்பாக இருந்தது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் அமோகமாக இருந்தது. இன்று மட்டும் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.1.69 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

எச்.டி.எப்.சி. வங்கி

சென்செக்ஸ் கணக்கிட உதவும் நிறுவன பங்குகளில், யெஸ் பேங்க், மாருதி, பவர்கிரீட், எல் அண்டு டி, ஸ்டேட் வங்கி மற்றும் வேதாந்தா உள்பட 23 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ, பார்தி ஏர்டெல் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி உள்பட 6 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. சன்பார்மா நிறுவன பங்கின் விலை மட்டும் இறுதியில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,606 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 925 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. இருப்பினும் 176 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவிதமாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.149.57 லட்சம் கோடியாக உயர்ந்தது. நேற்று வர்த்தகம் முடிவடைந்தபோது நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.147.88 லட்சம் கோடியாக இருந்தது.

தேசிய பங்குச் சந்தை

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 246.32 புள்ளிகள் உயர்ந்து 39,298.38 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 75.50 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,661.85 புள்ளிகளில் முடிவுற்றது.