ரூ.1.03 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்… சென்செக்ஸ் 470 புள்ளிகள் வீழ்ச்சி….

 

ரூ.1.03 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்… சென்செக்ஸ் 470 புள்ளிகள் வீழ்ச்சி….

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் மிகவும் மோசமாக இருந்தது. சென்செக்ஸ் 470 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று காலையில் பங்கு வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதன் காரணமாக ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடக்கத்தில் பின்னடைவை சந்தித்தது. அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. மேலும் பங்கு வர்த்தகத்துக்கு ஆதரவாக பெரிய தகவல்கள் எதுவும் வெளியாகதால் இன்று பங்கு வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது.

எல் அண்டு டி

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், எல் அண்டு டி, பார்தி ஏர்டெல், இண்டஸ்இந்த் வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட் மற்றம் சன்பார்மா உள்பட 7 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், பஜாஜ் பைனான்ஸ், டைட்டன், மகிந்திரா அண்டு மகிந்திரா, ஹீரோமோட்டோகார்ப், டெக்மகிந்திரா மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி உள்பட 23 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மகிந்திரா அண்டு மகிந்திரா

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,202 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,184 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 215 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.119.78 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று ஒரே நாளில் பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.03 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 469.60 புள்ளிகள் குறைந்து 30,690.02 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 118.05 புள்ளிகள் சரிந்து 8,993.85 புள்ளிகளில் முடிவுற்றது.