ரிசர்வ் வங்கி அதிகாரிகளுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை!

 

ரிசர்வ் வங்கி அதிகாரிகளுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ரிசர்வ் வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு அது தொடர்பாக ரிசர்வ் வங்கி அதிகாரிகளுடன் மத்திய நிதி அமைச்சர் ஆலோசனை செய்வது வழக்கமான ஒன்று. அந்த கூட்டத்தில் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் தொடர்பாக அவர்கள் ஆலோசனை செய்வர். 2019-20-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த வெள்ளிக்கிழமையன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். 

ஆர்.பி.ஐ.

இதனையடுத்து இன்று நடைபெறும் ரிசர்வ் வங்கியின் மத்திய வாரிய கூட்டத்தில் ஆர்.பி.ஐ. அதிகாரிகளுடன் மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்துகிறார். மத்திய பட்ஜெட்டில், நிதிப்பற்றாக்குறை இலக்கு 3.3 சதவீதமாக குறைக்கப்பட்டது. இடைக்கால பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டதை காட்டிலும் கூடுதலாக ரூ.6 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என்பதால் நிதிப்பற்றாக்குறை இலக்கு 3.4 சதவீதத்திலிருந்து 3.3 சதவீதமாக குறைக்கப்பட்டது. மேலும், 2020-21ம் நிதியாண்டுக்குள் நிதிப்பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதமாக குறைக்கும் திட்டத்தையும் வைத்துள்ளது.

சக்திகந்த தாஸ்

ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனங்களின் ஒழுங்குமுறை ஆணைய பொறுப்பு ரிசர்வ் வங்கிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நிதி ஆண்டில் ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு டிவிடெண்டாக ரூ.90 ஆயிரம் கோடி கொடுக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி இதற்கு முன் ஒரு நிதியாண்டில் டிவிடெண்டாக (2015-16) அதிகபட்சமாக ரூ.65,896 கோடியை மத்திய அரசுக்கு கொடுத்து இருந்தது. ரிசர்வ் வங்கி ஜூலை-ஜூன் காலத்தை நிதியாண்டாக கொண்டு செயல்படுகிறது.

இன்று நடைபெறும் ரிசர்வ் வங்கியின் மத்திய வாரிய கூட்டத்தில், பட்ஜெட் அறிவிப்புகள் தொடர்பாக நிர்மலா சீதாராமன் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்வார்.