ராமேஸ்வரம் கோயிலில் அமைக்கப்பட்ட புதிய தீர்த்த கிணறுகளில் பக்தர்கள் புனித நீராடினர் 

 

ராமேஸ்வரம் கோயிலில் அமைக்கப்பட்ட புதிய தீர்த்த கிணறுகளில் பக்தர்கள் புனித நீராடினர் 

ராமேஸ்வரம் கோயிலில் புதிதாக அமைக்கப்பட்ட  தீர்த்தங்களுக்கு நேற்று முன்தினம் காலை பூஜைகள் நடை பெற்றது. அதனையடுத்து நேற்று முதல் இந்த தீர்த்த கிணறுகளில் நீராட பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற கோயிலான ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில், சிவ ஸ்தலங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்தால் அவர்களது ஆசி கிடைக்கும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கையாகும்.

raamesgh

தினமும் ராமநாத சுவாமியை வழிபாடு செய்வதற்கு  நாடு முழுவதும் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக அமாவாசை நாட்களில் லட்சக்கணக்கானோர் வந்து வழிபாடு செய்கின்றனர்.

பிரசித்தி பெற்ற ராமநாத சுவாமி கோயில் வளாகத்தில் 22 புனித தீர்த்த கிணறுகள் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடினால் பாவங்கள் போகும் என்பது மக்களின் நீண்ட கால நம்பிக்கையாகும். இதனால் இக்கோயிலில் நீண்ட நேரம் காத்திருந்து திரளான பக்தர்கள் நீராடுவது வழக்கம் ஆகும்.

ramss

இந்த புனித தீர்த்தங்களில் ஆறு தீர்த்த கிணறுகள் மிகவும் குறுகலான பாதையில் அமைந்திருந்தது. இதனால் பக்தர்கள் புனித நீராட மிகவும் சிரமம் அடைந்தனர். 

இதையடுத்து நெருக்கடியான இடத்தில் உள்ள ஆறு புனித தீர்த்த கிணறுகளை மாற்றக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு சவுகரியமான இடத்தில் ஆறு புனித தீர்த்த கிணறுகளை மாற்ற உத்தரவிட்டது.

ramsdefr

கடந்த சில மாதங்களாக கோயிலின் வடக்கு பகுதியில்  புதிய கிணறு தோண்டும் பணி நடைபெற்று வந்தது. தற்போது பணிகள் நிறைவடைந்த நிலையில்.புதிதாக அமைக்கப்பட்ட தீர்த்த கிணறுகளுக்கு மகாலட்சுமி,சரஸ்வதி,கங்கா, யமுனா,சங்கு,சக்கரம் என பெயரிடப்பட்டுள்ளது.

புதிய தீர்த்தங்களுக்கு நேற்று முன்தினம் காலை கோயிலில் கணபதி பூஜை மற்றும் யாகசாலை பூஜைகள் நடை பெற்றது . அதனையடுத்து அம்பாள் மற்றும் சுவாமிக்கு புனித தீர்த்தத்தில் அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கோயில் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.நேற்று  2-ம் கால யாகசாலை பூஜை முடிந்த பின் பக்தர்கள் புனித தீர்த்த கிணறுகளில் நீராட அனுமதிக்கபட்டனர்.