ராஜஸ்தானில் 50 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு

 

ராஜஸ்தானில் 50 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு

ராஜஸ்தான் மாநிலத்தில் ஜிகா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது

ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் ஜிகா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.

டெங்கு, சிக்குன்குனியாவைத் தொடர்ந்து, கொசுக்கடியால் உருவாகும் புதிய கிருமி தொற்றான ஜிகா வைரஸ் பாதிப்பு கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரியில் இந்தியாவில் உணரப்பட்டது. இந்த வைரஸ் முதன்முதலில் 1947-ஆம் ஆண்டு உகாண்டாவில் உள்ள ஜிகா (Zika) என்ற காட்டில் குரங்குகளை தாக்கியபோதுதான், இந்த கிருமி பற்றி தெரிய வந்தது. சமீபகாலத்தில், 2007 மற்றும் 2013–ம் ஆண்டுகளில், பசிபிக் நாடுகளில் ‘ஜிகா’ வைரஸ் தாக்கியது.

அதன்பின்னர், இந்த வைரஸ் தாக்குதல் உலகம் முழுவதும் பரவியது. கிருஷ்ணகிரியில் ஜூலை மாதத்தில் ஜிகா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் பாதிப்புக்கு மத்திய அரசு அதிக கவனம் எடுத்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில்,  ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பாக ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10-ஆக இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. மேலும், ஜிகா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும் 150-யை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.