ரயில் நிலையங்களிலிருந்து பயணிகளை சொந்த ஊருக்கு அனுப்ப சிறப்பு பஸ்கள் இயக்கலாம்… மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுமதி…
ரயில் நிலையங்களிலிருந்து பயணிகளை சொந்த ஊருக்கு அனுப்ப சிறப்பு பஸ்களை இயக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
லாக்டவுன் காரணமாக வெளிமாநிலங்களில் சிக்கி தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், யாத்ரீகர்கள், சுற்றுலாவுக்கு சென்றவர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோரை அவர்களது சொந்த மாநிலத்துக்கு திருப்பி அனுப்ப சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சிறப்பு ரயில்களில் சொந்த மாநிலங்களுக்கு செல்லும் பயணிகள் புதிய சிக்கலை சந்திக்கின்றனர். லாக்டவுன் காரணமாக பல பகுதிகளுக்கு போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சொந்த மாநிலத்துக்கு வந்த பிறகும் சொந்த ஊருக்கு எப்படி செல்வது என்று வழிதெரியாமல் திண்டாடுகின்றனர்.
இதனையடுத்து பல மாநில அரசுகள் ரயில் பயணிகளை அவர்களது வீட்டுக்கு அனுப்ப சிறப்பு பஸ்களை இயக்கக் அனுமதிக்கோரி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதின. அதற்கு தற்போது பலன் கிடைத்துள்ளது. ரயில் நிலையங்களிலிருந்து பயணிகளை சொந்த ஊருக்கு அனுப்ப சிறப்பு பஸ்களை இயக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கூறுகையில், பல்வேறு மண்டலங்களில் பொது மற்றும் தனிநபர் போக்குவரத்துக்கு கட்டுபாடுகள் உள்ளதால், ரயிலில் வரும் பயணிகளை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி சிறப்பு பஸ்களை இயக்க பல மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் அனுமதி கேட்டு இருந்தன. நிலைமையைக் கருத்தில் கொண்டு, மத்திய மற்றும் யூனியன் பிரதேசங்கள் பொது அல்லது தனிப்பட்ட போக்குவரத்து கிடைக்காத இடங்களில் ரயில் நிலையங்களிலிருந்து சிறப்பு பேருந்துக்கள் இயக்க அனுமதிக்கப்படுகின்றன, முறையான சமூல விலகல் விதிமுறைகளை பராமரிக்கவேண்டும் என தெரிவித்தார்.