ரமணா பாணியில் இறந்தவருக்கு சிகிச்சையளித்து மருத்துவமனை பணம் பறிப்பு: தஞ்சையில் நிகழ்ந்த அவலம்

 

ரமணா பாணியில் இறந்தவருக்கு சிகிச்சையளித்து மருத்துவமனை பணம் பறிப்பு: தஞ்சையில் நிகழ்ந்த அவலம்

தஞ்சாவூரில் தனியார் மருத்துவமனை ஒன்று உயிரிழந்தவருக்கு  சிகிச்சை அளித்து ரூ.3 லட்சம் பறித்திருப்பது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் தனியார் மருத்துவமனை ஒன்று உயிரிழந்தவருக்கு சிகிச்சை அளித்து ரூ.3 லட்சம் பறித்திருப்பது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

நாகை மாவட்டம், கீழைஈசனூர் பகுதியை சேர்ந்தவர் சேகர் (55). இவர் நாகை அரசு பேருந்தில் நடத்துனராக இருந்து வந்தார். சேகருக்கு குடல் இறக்க நோய் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனையடுத்து சேகரை நாகையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த 7-ம் தேதி சிகிச்சைக்காக அவரது மகன் சுபாஷ் அனுமதித்தார். அங்கு சேகருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதன் பின்னரும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை என்பதால் சேகருக்கு நாகையில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் கடந்த 8-ம் தேதி தஞ்சை வ.உ.சி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேகரை சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிப்பதற்கு முதல் தவணையாக ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கட்டும்படி கூறியுள்ளனர். பணம் கட்டி முடிந்த பின்பு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிஒரது.

இருப்பினும் சேகரின் உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த அவரது உறவினர்கள் சேகரை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்க அழைத்து செல்கிறோம் என மருத்துவமனையிடம் கூறியிருக்கின்றனர். அப்போது அந்த தனியார் மருத்துவமனை நிர்வாகம் பாக்கி இருக்கும் ரூ.5 லட்சத்தை கட்டும்படி கூறியுள்ளது.

இதையடுத்து ரூ.50 ஆயிரத்தை கட்டிவிட்டு மீதி பணத்தை சில தினங்களில் கட்டி விடுகிறோம் என்று எழுதி கொடுத்துவிட்டு சேகரை தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சேகர் இறந்து 3 நாட்கள் ஆகி விட்டதாக தெரிவித்தனர். இதனால் சேகர் மகன் சுபாஷ் மற்றும் அவரது உறவினர்கள் பேரதிர்ச்சி  அடைந்தனர். இதுகுறித்து சேகரின் குடும்பத்தினர் தஞ்சை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் சந்தேகப்படும் மரணம் என்று வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்று பிற்பகல் சேகரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட இருக்கிறது அதில் அவர் எப்போது இறந்தார்? என்பது உறுதி செய்யப்பட்டு அதன் பின்னர் தனியார் ஆஸ்பத்திரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

விஜயகாந்த் நடிப்பில் வெளியான ரமணா திரைப்படத்தில் உயிரிழந்தவருக்கு சிகிச்சை அளிப்பது போல் மருத்துவர்கள் நடித்து பணத்தை பிடுங்குவது போல் காட்சிகள் இடம்பெற்றிருக்கும். தற்போது நிஜத்திலும் அந்த காட்சி அரங்கேறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.