ரத்தினகிரீசுவரர் கோயிலில் கந்த சஷ்டி விழா: 45 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுவதால் பக்தர்கள் உற்சாகம் 

 

ரத்தினகிரீசுவரர் கோயிலில் கந்த சஷ்டி விழா: 45 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுவதால் பக்தர்கள் உற்சாகம் 

குளித்தலை அருகே அமைந்துள்ள ரத்தினகிரீசுவரர் கோயிலில் கந்த சஷ்டி விழா வெகு விமர்சையாக தொடங்கியது. 

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள அய்யர்மலையில் பிரசித்தி பெற்ற ரத்தினகிரீசுவரர் கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா சுமார் 45 ஆண்டுகள் நடத்தப்படாமல் இருந்து வந்தது.

muruga

இந்நிலையில் இந்த ஆண்டு கோயில் நிர்வாகம் மற்றும் அய்யர்மலை சூரசம்ஹார விழா அறக்கட்டளை சார்பில் கந்த சஷ்டி விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதில் சூரசம்ஹாரத்திற்கு முக்கியமான ஒன்றான சூரனின் சிலை மற்றும் 4 முகங்களான கஜமுகாசூரன், சிங்கமுகாசூரன், பானுகோபன், சூரபத்மன் ஆகியவை சுவாமிமலையில் செய்யப்பட்டு ரத்தினகிரீசுவரர் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

muruga

இதையடுத்து கந்த சஷ்டி விழாவுக்காக கடந்த 4 ஆம் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டது. நேற்று முன்தினம் மலைமேல் இருந்து வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி அடிவாரத்திற்கு கொண்டு வரப்பட்டார்.

7 நாட்கள் நடைபெறவுள்ள இத்திருவிழாவின் முதல் நாளான நேற்று காலை விக்னேஷ்வரபூஜை, வாஸ்துசாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.

மாலையில் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடத்தப்பட்டு மலையை சுற்றிலும் சுவாமி வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

murugaahj

இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 13-ந் தேதி நடைபெறுகிறது. சுமார் 45 ஆண்டுகளுக்கு பிறகு இக்கோவிலில் கந்த சஷ்டி விழா,சூரசம்ஹாரம் நடப்பது இப்பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.