ரத்தம் சிந்தி ஆடிய வாட்சன்: காலில் ஆறு தையல் போடப்பட்ட சம்பவம்; ரசிகர்கள் நெகிழ்ச்சி!
ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப் போட்டியில், காலில் ரத்தம் வழிந்தபடியே சென்னை அணிக்காக ஷேன் வாட்சன் விளையாடினார் என்று, சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்: ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப் போட்டியில், காலில் ரத்தம் வழிந்தபடியே சென்னை அணிக்காக ஷேன் வாட்சன் விளையாடினார் என்று, சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் மிக முக்கிய போட்டியான இறுதி போட்டி ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்றது. பரபரப்பான திக்திக் நிமிடங்களுக்கு மத்தியில் மும்பை அணி 1 ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது. வெற்றி பெற்ற மும்பை அணிக்கு 20 கோடி மற்றும் கோப்பையும், 2-ம் இடம் பிடித்த சென்னைக்கு 12 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது.
இருப்பினும் சென்னை அணியை வெற்றியின் விளிம்பு வரை கொண்டு சென்ற பெருமை வாட்சனையே சாரும். தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கிய வாட்சன் பொறுப்பை அறிந்து நிதானமாக ஆடி ரன் குவித்ததோடு, தேவைபடும் நேரத்தில் அதிரடியாகவும் ஆடி அசத்தினார். மலிங்கா ஓவரில் சிக்ஸ்களும், பவுண்டரிகளும் பறந்தன. இவர் 59 பந்துகளில் 80 ரன்கள் குவித்தார். இருப்பினும் வாட்சன் அவுட் ஆகாமல் இருந்திருந்தால் சென்னை அணியின் வெற்றி வேற லெவலில் இருந்திருக்கும். அதனால் தான் வாட்சன், தோனி இருவரும் அவுட் ஆன போது சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் வாட்சன் காலில் அடிபட்டு ரத்தம் வழிந்த போதும் கூட அவர் தொடர்ந்து ஆடியது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
இது குறித்து ஹர்பஜன் சிங் தனது இன்ஸ்டராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வாட்சன் காலில் அடிபட்டு ரத்தம் வழியும் புகைப்படத்தைப் பதிவிட்ட அவர், ‘ரன் ஓடும் போது டைவ் அடித்ததில் வாட்சனுக்கு அடிப்பட்டு காலில் ரத்தக் காயம் ஏற்பட்டுள்ளது. இதை யாரிடமும் சொல்லாமல் அணிக்காக வாட்சன் விளையாடினார். போட்டிக்கு பின்னர் ஆறு தையல்கள் போடப்பட்டுள்ளது ‘ என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐபிஎல் தொடக்க ஆட்டங்களில் சரியாக ஆடாததால் வாட்சனை பலரும் விமர்சனம் செய்து வந்தனர். இருப்பினும் தோனியும், சிஎஸ்கே பயிற்சியாளரும் அவர் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு ஊக்கம் அளித்தனர். அந்த நம்பிக்கைக்குக் கைமாறாய் தான் வாட்சன் தன் ரத்தம் சிந்தி தன் பங்களிப்பை அளித்துள்ளார் என்று சென்னை ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.