ரஜினியும் கமலும் கூட்டணி வைக்க வேண்டும் : நடிகர் விஷால் கோரிக்கை!

 

ரஜினியும் கமலும்  கூட்டணி வைக்க வேண்டும் : நடிகர் விஷால் கோரிக்கை!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும், நடிகர் ரஜினிகாந்தும் தேர்தலில் கூட்டணி வைக்க வேண்டும் என நடிகர் விஷால் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும், நடிகர் ரஜினிகாந்தும் தேர்தலில் கூட்டணி வைக்க வேண்டும் என நடிகர் விஷால் விருப்பம் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய கமல்ஹாசன் தற்போது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முனைப்பு காட்டி வருகிறார். அதுமட்டுமல்லாமல் 40 தொகுதிகளிலும்  மய்யம் போட்டியிடும் என்று அறிவித்தார்.  இதற்கிடையே வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும் தமிழக சட்டமன்றத் தேர்தல்தான் தங்களது இலக்கு என்றும் ரஜினிகாந்த் அறிவிப்பு வெளியிட்டார். 

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், ரஜினியின் ஆதரவு எனக்கு இருக்கும் என நம்புகிறேன் என்று தெரிவித்தார். இந்தச்சூழலில் தான் மக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்கத்தை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து இருந்தார். அதற்கு நன்றி தெரிவித்த கமல், ‘என் 40 ஆண்டு கால நண்பரே. நல்லவர் துணை நின்றால் நாற்பது எளிதே நாளை நமதே’ என்று சூசகமாக ஆதரவு கோரினார்

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசனும், நடிகர் ரஜினிகாந்தும் தேர்தலில் கூட்டணி வைக்க வேண்டும் என நடிகர் விஷால் விருப்பம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது  டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘நடிகர்கள் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் சேர்ந்து வர வேண்டும். இது நடிகர் சங்க விழாவுக்கோ, எந்த நடிகரின் வரவேற்புக்கோ, வேறு எதற்குமே அல்ல. அவர்கள் வரவுள்ள மக்களவை தேர்தலுக்கு சேர்ந்து வர வேண்டும். அது மாற்றத்தைக் கொண்டுவரும் நடவடிக்கையாக அமையும்’ என்று பதிவிட்டுள்ளார்.