ரஃபேல் வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைப்பு

 

ரஃபேல் வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைப்பு

ரஃபேல் விவகாரத்தில் விசாரணை கோரிய வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது

டெல்லி: ரஃபேல் விவகாரத்தில் விசாரணை கோரிய வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

பிரான்சின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து அதிநவீன 36 ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனமும் டசால்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பு பணியை மேற்கொள்கிறது.

ஆனால், பிரான்ஸ் – இந்தியா இடையேயான ரஃபேல் போர் விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், பெருமளவில் ஊழல் நடந்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதையடுத்து, ரஃபேல் ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி உள்ளிட்டோர் பொதுநல வழக்குகள் தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை  தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் ரபேல் விலை விவரங்கள் அதில் இடம்பெறவில்லை.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி ரஞ்சய் கோகாய் தலைமையிலான அமர்வு முன் மீண்டும் இன்று நடைபெற்றது. அப்போது, ரஃபேல் விமான தயாரிப்பில் டசால்ட் நிறுவனத்தின் துணை நிறுவனம் யார் என்பது குறித்து இன்னும் டசால்ட் நிறுவனம் எங்களுக்கு தெரிவிக்கவில்லை என மத்திய அரசு வாதிட்டது. ஆனால், ரஃபேல் விலை தொடர்பான ரகசியங்களை அரசு மறைப்பதாக மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் குற்றம் சாட்டினார். நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வாதிட்டார். இதற்கு மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

தொடர்ந்து, விமான விலை தொடர்பான விபரங்களை இணையதளத்தில் வெளியிடாத வரை ரஃபேல் ஒப்பந்தம் போடப்பட்ட விலை தொடர்பாக எதுவும் விவாதிக்க முடியாது. விமானத்தில் விலை தொடர்பான விபரங்களை வெளியிட முடியாது என கூறுவது ஏற்புடையது அல்ல. மத்திய அரசு அல்லது விமானப்படை அதிகாரி ஒருவர் ஆஜராகி ரபேல் ஒப்பந்தம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து, மதிய உணவு இடைவேளைக்கு பிறகு, விமானப்படை துணை தளபதி நேரில் ஆஜராகி நீதிபதிகள் கேள்விகளுக்கு பதிலளித்தார். சுமார் நன்கு மணி நேரம் நடந்த வழக்கு விசாரணையில் வாதங்கள் முடிவடைந்ததை தொடர்ந்து, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது.