யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூருக்கு மார்ச் 20ம் தேதி வரை காவல் நீட்டிப்பு!

 

யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூருக்கு மார்ச் 20ம் தேதி வரை காவல் நீட்டிப்பு!

இவரின் மகள்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில்  அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

யெஸ்  வங்கி வாராக்கடன் பிரச்னையால் பொருளாதார  நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் ரிசர்வ் வங்கி யெஸ்  வங்கியை தன்வசம் கையகப்படுத்தியுள்ளது. யெஸ் வங்கி  நிறுவனர்  ராணா கபூரின்  மும்பை வீடு மற்றும்  இவரின் மகள்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில்  அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

 

இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் அவர் மீது பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் மும்பைலுள்ள அலுவலகத்திற்கு அழைத்து சென்ற அதிகாரிகள் ஆவணங்கள் அடிப்படையில் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். 

 

அப்போது டி.ஹெச்.எஃப்.எல் நிதி நிறுவனத்தின் 4,450 கோடி ரூபாய் வாராக்கடனுக்கு நடவடிக்கை எடுக்காமலிருக்க 600 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதற்கு முகாந்திரம் இருப்பது தெரியவந்தது.  அதேபோல் கடக்கும் நிதி நெருக்கடியிலிருந்த நிறுவனங்களுக்கு அதிகளவு கடன் கொடுத்து அதன் மூலம் ஆதாயம் பெற்று வந்ததும் தெரியவந்தது. 

ttn

இந்நிலையில் அமலாக்கத்துறையினரால் கடந்த 8 ஆம் தேதி கைது செய்யப்பட்ட யெஸ்  வங்கி  நிறுவனர் ராணா கபூரை  அமலாக்கத்துறையினர் விசாரணை காலம் முடிந்த நிலையில்  நேற்று மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது  ராணா கபூர் தரப்பில் அவருக்கு  நீண்ட கால ஆஸ்துமா, மன அழுத்த பிரச்னை இருப்பதாக கூறி ஜாமீன் கோரப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதி, அமலாக்கத்துறை காவலை 20-ந்தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.  இதன் மூலம் இரண்டாவது முறையாக ராணா கபூரின் காவல் நீடிக்கப்பட்டுள்ளது.