யூடியூப் பார்த்து குக்கரில் சாராயம் காய்ச்சி விற்ற இளைஞர்கள் கைது!
தமிழகத்தில் கடந்த 24ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மார்ச் 31ம் தேதி வரை ஒரு வாரத்துக்கு என்று அறிவிப்பு வெளியானது. இதனால் அனைவரும் ஒருவாரத்துக்குத் தேவையான பொருட்களை வாங்கி வைத்துக்கொண்டனர்.
யூடியூப் வீடியோ பார்த்து குக்கரில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த நான்கு இளைஞர்களை சிதம்பரம் போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 24ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மார்ச் 31ம் தேதி வரை ஒரு வாரத்துக்கு என்று அறிவிப்பு வெளியானது. இதனால் அனைவரும் ஒருவாரத்துக்குத் தேவையான பொருட்களை வாங்கி வைத்துக்கொண்டனர். மது பிரியர்களும் ஒரு வாரத்துக்குத் தேவையான மதுவை வாங்கி வைத்துக்கொண்டனர். ஆனால், ஊரடங்கு நடைமுறைக்கு வந்த அன்றைய தினமே ஊரடங்கு ஏப்ரல் 14ம் தேதி வரை அமல்படுத்தப்படும் என்று மோடி அறிவித்தார். இதனால் பொது மக்களைக் காட்டிலும் குடிமகன்கள் தவித்துப்போயினர்.
இதன் வெளிப்பாடு தமிழகத்தில் நடக்கும் மது தொடர்பான தற்கொலைகள், டாஸ்மாக் கடை உடைத்து மது பாட்டல் திருட்டு உள்ளிட்ட சம்பவங்களே சாட்சியாக உள்ளன. ஏப்ரல் 14ம் தேதிக்குப் பிறகாவது கடை திறக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு பேரிடியாக மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு வந்தது.
இதனால் சுயதொழில் போல தமிழகத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுதலும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நான்கு இளைஞர்கள் கள்ளச்சாராயம் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீசார் காத்திருந்து விற்பனை செய்ய வந்த நான்கு பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் கள்ளச்சாராயம் எப்படிக் கிடைத்தது என்று கேட்டபோது அவர்கள் கூறிய தகவல் அதிர்ச்சியை அளித்தது.
வீட்டிலேயே குக்கரில் யூடியூப் வீடியோ பார்த்து கள்ளச்சாராயத்தைக் காய்ச்சியதாகவும், தங்களிடம் பலரும் கேட்டதால் அதை அப்படியே விற்பனை செய்ய ஆரம்பித்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். வீட்டில் சோதனையிட்டு 220 லிட்டர் சாராயத்தையும் போலீசார் கைப்பற்றினர். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த சிதம்பரம் போலீசார் சிறையில் அடைத்தனர்.