யாரும் வர வேண்டாம் என்று அறிவிப்பு பலகை வைத்த அமைச்சர்… சட்டப் பேரவை கூட்டத்தை ஒத்திவைக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

 

யாரும் வர வேண்டாம் என்று அறிவிப்பு பலகை வைத்த அமைச்சர்… சட்டப் பேரவை கூட்டத்தை ஒத்திவைக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை காலையில் இருந்து மாலை வரை யாரும் வெளியில் செல்ல வேண்டாம் என்று, பிரதமர் நேற்று தெளிவான ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இந்தியாவில் இருக்கும் பல்வேறு மாநிலங்கள், குறிப்பாக ஒடிசா, சத்தீஸ்கர், உத்தரகாண்ட் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

“கொரோனா பாதிப்பு காரணமாக கூட்டமாக உள்ள இடத்துக்கு செல்ல வேண்டாம் என்று மக்களுக்கு விழிப்புணர்வு சொல்லிவிட்டு கூட்டமாக அமர்ந்து சட்டப்பேரவையை நடத்திக் கொண்டிருக்கிறோம். எனவே, சட்டப் பேரவை கூட்டத் தொடரை ஒத்தி வைக்க வேண்டும்” என்று  மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

mk-stalin-89

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் பேசியதாவது:
“கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை காலையில் இருந்து மாலை வரை யாரும் வெளியில் செல்ல வேண்டாம் என்று, பிரதமர் நேற்று தெளிவான ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இந்தியாவில் இருக்கும் பல்வேறு மாநிலங்கள், குறிப்பாக ஒடிசா, சத்தீஸ்கர், உத்தரகாண்ட் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. நாமும் விழிப்போடு இருக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம். நோய்த் தடுப்பு குறித்து பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். அதை மறுப்பதற்கு இல்லை. குறிப்பாக, தனிமைப்படுத்துவதற்கு வலியுறுத்திவிட்டு கூட்டம் கூடாதீர்கள் என்று தொடர்ந்து எச்சரிக்கை செய்துவிட்டு இந்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்திக்கொண்டிருக்கும் அதேநேரத்தில், நாமே சட்டப்பேரவையில் கூட்டமாக அமர்ந்து இங்கே விவாதித்துக் கொண்டிருப்பது முறையா? என்பதை அரசின் கவனத்திற்கு நான் கொண்டு வருகிறேன்.

இங்கே அமைச்சரவையில் ஒரு மூத்த அமைச்சர் தன்னுடைய வீட்டு வாசலில் ஒரு விளம்பரப் பலகை வைத்திருக்கிறார். அது நேற்று பத்திரிகையில் வந்துள்ளது. நான் பெயர் சொல்ல விரும்பவில்லை. ‘யாரும் என்னை வந்து பார்க்க வேண்டாம். சென்னைக்கும் தேடி வந்து என்னைப் பார்க்க வேண்டாம்’ என அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பிரச்னையை அடிப்படையாக வைத்து அப்படி வைத்திருக்கிறார். அமைச்சருக்கே அந்த அச்சம் இருக்கிறது. ஆனால், கூட்டமாக நாம் இங்கே உட்கார்ந்துகொண்டு சட்டப்பேரவையை நடத்திக்கொண்டிருக்கிறோம் என்பதற்காகத்தான் சொன்னேனே தவிர, விமர்சனம் செய்வதற்காக சொல்லவில்லை.
நாம் சட்டப்பேரவையை ஒத்திவைப்பது என்பது, ஒரு பீதியை ஏற்படுத்துவதற்காக அல்ல என்பதை முதலில் நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். காரணம், மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி, இந்த நேரத்தில் அந்தந்த தொகுதியில் அந்தந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருந்தால்தான், ஓரளவுக்கு நாம் மக்களோடு இருந்து தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய ஒரு சூழல் உருவாகும் என்பதை முதல்வருக்கும் இந்த அரசுக்கும் நினைவுபடுத்த விரும்புகிறேன். அதேபோல், விழிப்புணர்வுப் பணிகள், நோய்த் தடுப்புப் பணிகள் போன்றவற்றை கண்காணிக்கவும் முடியும். ‘நாம் வாக்களித்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் நம்மோடு இல்லையே’ என்று மக்கள் எண்ணக்கூடிய நிலை உருவாகிவிடும். அதனால், மக்களுடைய பாதுகாப்புக்காக சில விதிகளை தளர்த்திக்கொள்வதில் தவறில்லை என்பதை இந்த அவைக்கு எடுத்துக் கூற விரும்புகிறேன்.

கடைகள், அங்காடிகள், மால், திரையரங்குகள் எல்லாம் மூடப்பட்டிருக்கின்றன என்று அறிவித்துக்கொண்டிருக்கிறோம். அதேநேரத்தில், சிறுசிறு கடைகள், வணிகங்கள் செய்துகொண்டிருக்கிறவர்கள், குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், சென்னையில் பாண்டி பஜார், ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை அங்கெல்லாம் முழுமையாக அனைத்துமே மூடப்பட்டிருக்கின்றன. கடைகளை மூட ஒரு அளவுகோல் வைத்திருக்கிறோமா? அளவுகோலை வைத்து கடைப்பிடித்தால்தான் முறைப்படுத்தப்படும் என்பதை இந்த அரசுக்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன். நேற்று ‘சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மூடப்படவில்லை’ என்று முதல்வரே இங்கு சொல்லி இருக்கிறார். ஆனால், கரோனா அச்சம் காரணமாக ஆங்காங்கே மூடப்படும் சூழ்நிலை உருவாகிக்கொண்டிருக்கிறது. பெரிய கடைகள், பல்பொருள் அங்காடிகள் மூடப்பட்டிருக்கின்றன. இதனால், தினக்கூலிகள், அமைப்புசாரா தொழிலாளர்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

corona-ward.jpg

அதனால், கேரளாவில் கடைப்பிடிப்பது போல, ரேஷன் பொருட்களை நேரடியாக வீட்டுக்குச் சென்று கொடுக்கும் வசதியை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும். இதற்கு நீங்கள் கேரளாவைப் போல் இங்கே பாதிப்புகள் இல்லை என்று சொல்வீர்கள்; நான் ஏற்றுக்கொள்கிறேன். குறிப்பாக, விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கிட, அரசே நேரில் சென்று கொடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். நேற்றுகூட பிரதமர் வலியுறுத்தி இருக்கிறார். அதாவது, ‘சிறு, குறு, நடுத்தர தொழில்கள் செயல்படாவிட்டாலும், அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இந்த மாதச் சம்பளத்தை நிறுத்தாமல் வழங்கிட வேண்டும்’, அதற்கு இந்த அரசு உத்தரவாதம் வழங்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். நம் மாநிலம் பிற மாநிலங்களைப் போல பாதிக்கப்படவில்லை என்பது உள்ளபடியே மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் பாதிக்கப்பட்டால் என்ன செய்வது?
அதற்கேற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தனிமைப்படுத்தக்கூடிய மையங்களை மாவட்ட அளவில் அமைப்பது, அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்துவது, தனியார் மருத்துவமனைகளை தயார்படுத்துவது, முகக் கவசங்கள், மருந்துகளைக் கொள்முதல் செய்வது போன்வற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.