‘மோடியை விட ஸ்டாலின் சிறந்த தலைவர்’ – சந்திரபாபு நாயுடு சென்னையில் பேட்டி

 

‘மோடியை விட ஸ்டாலின் சிறந்த தலைவர்’ – சந்திரபாபு நாயுடு சென்னையில் பேட்டி

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று அவரது இல்லத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

அடுத்தாண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த, பிரம்மாண்ட கூட்டணி அமைக்கும் முயற்சியில் எதிர்க்கட்சியினர் இறங்கியுள்ளனர். குறிப்பாக, மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் இதற்கான பணிகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்திய சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் குமாரசாமி மற்றும் முன்னாள் பிரதமர் தேவகவுடா ஆகியோரை நேற்று சந்தித்து சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தியிருந்தார்.

அதன் தொடர்ச்சியக திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்துவதற்காக இன்று சென்னை வந்திருந்தார் சந்திரபாபு நாயுடு. 

ஆலோசனைக்கு பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது ஸ்டாலின் பேசுகையில், “மத்தியில் நடைபெற்று வரும் மக்கள் விரோத பாஜக ஆட்சியை அப்புறப்படுத்த சந்திரபாபு நாயுடுவின் முயற்சிக்கு திமுக முழு ஆதரவை தெரிவித்துள்ளது. 

சிபிஐ, ஆர்பிஐ உள்ளிட்ட அமைப்புகள் சுதந்திரமாக செயல்படாத நிலை உள்ளது. மாநில உரிமைகளை மீட்க பாஜகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். அதற்கு, மாநில கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும். விரைவில் அனைத்து தலைவர்களும் இணைந்து டெல்லியில் அல்லது வேறு முக்கிய மாநிலத்தில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

அதன்பின் பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, “சிபிஐ, ஆர்பிஐ ஆகியவற்றின் பெருமையும் புகழும் குலைக்கப்படுகிறது. ஆளுநர்களை தங்கள் விருப்பத்துக்கு மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது. பணமதிப்பு நீக்கத்தால் கருப்பு பணம் வெள்ளையாக்கப்பட்டு விட்டது. ஜனநாயகத்தை காக்க காங்கிரஸ் உட்பட அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். நாட்டின் நலன் மீது அக்கறை கொண்டவர்களை ஒரே தளத்தின் கீழ் ஒன்றிணைக்க முயற்சி செய்கிறோம். தனிநபர்களைப் பற்றி பேச இது நேரமல்ல, நாட்டின் நலன், ஜனநாயகமே இப்போது முக்கியம்.” என பேசியுள்ளார்.

மேலும், எதிர்கட்சிகளின் கூட்டணியை வழிநடத்தும் தலைவர் யார் என்ற கேள்விக்கு, கூட்டணியை வழிநடத்த பல தலைவர்கள் உள்ளதாகவும், மோடியை விட ஸ்டாலின் சிறந்தவர் என்றும் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.