மோடியை தமிழகத்திற்குள் நுழைய விட மாட்டோம்: ஸ்டாலினின் சவாலை ஏற்றார் ஹெச்.ராஜா!
பிரதமர் மோடியை தமிழகத்திற்குள் நுழைய விடமாட்டோம் என திமுக தலைவர் ஸ்டாலின் விட்டிருக்கும் சவாலை ஏற்பதாக ஹெச்.ராஜா அறிவித்துள்ளார்.
சென்னை: பிரதமர் மோடியை தமிழகத்திற்குள் நுழைய விடமாட்டோம் என திமுக தலைவர் ஸ்டாலின் விட்டிருக்கும் சவாலை ஏற்பதாக ஹெச்.ராஜா அறிவித்துள்ளார்.
மேகதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டுவது தொடர்பான ஆய்விற்கு மத்திய அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியிருந்தது. ஒருவேளை, மேகதாட்டுவில் கர்நாடகா அணை கட்டிவிட்டால் காவிரி டெல்டா மாவட்டங்கள் கடும் வறட்சியை சந்திக்கும் நிலை ஏற்படும். மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து திமுக தலைமையில் காங்கிரஸ், மதிமுக, விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்ட அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், திருச்சியில் நேற்று மத்திய அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில், தமிழக விவசாயிகளைக் கண்டு கொள்ளாத பிரதமர் மோடியை தமிழகத்திற்குள் நுழைய விடமாட்டோம் என பேசியிருந்தார்.
சவாலை ஏற்போம்:
தமிழகத்துக்குள் மோடி நுழைய முடியாத சூழ்நிலை ஏற்படுத்துவாராம் ஸ்டாலின். பாஜக இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சாது. ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ஒரு பைசா குறைக்கக் கோரி போராடிய விவசாயிகளை சுட்டக் கொன்ற திமுக விவசாயிகளுக்காக நீலிக் கண்ணீர் வடிப்பதா.? நடிப்பதா?— H Raja (@HRajaBJP) December 5, 2018
இதற்கு தன் ட்விட்டர் பக்கத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கொடுத்துள்ள பதிலடியில், “சவாலை ஏற்போம்: தமிழகத்துக்குள் மோடி நுழைய முடியாத சூழ்நிலை ஏற்படுத்துவாராம் ஸ்டாலின். பாஜக இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சாது. ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ஒரு பைசா குறைக்கக் கோரி போராடிய விவசாயிகளை சுட்டக் கொன்ற திமுக விவசாயிகளுக்காக நீலிக் கண்ணீர் வடிப்பதா.? நடிப்பதா?” என பதிவிட்டுள்ளார்.