மோடிக்கு எதிர்ப்பு: விமான நிலையத்தில் மோதிக்கொண்ட வைகோ – தமிழிசை

 

மோடிக்கு எதிர்ப்பு: விமான நிலையத்தில் மோதிக்கொண்ட வைகோ – தமிழிசை

தமிழகத்தை வஞ்சித்துள்ள பிரதமர் மோடிக்கு, மக்களின் கொந்தளிப்பை காட்டும் விதமாக கருப்புக்கொடி காட்டினோம் என்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

சென்னை : தமிழகத்தை வஞ்சித்துள்ள பிரதமர் மோடிக்கு, மக்களின் கொந்தளிப்பை காட்டும் விதமாக கருப்புக்கொடி காட்டினோம் என்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு எதிராக நேற்று வைகோ தலைமையில் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் திருப்பூரில் நடைபெற்றது. இதையடுத்து வைகோ உள்ளிட்ட மதிமுகவினர் கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டனர். 

இந்நிலையில் இன்று சென்னை விமானநிலையம் வந்த வைகோ, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘தமிழகத்திற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தவர் மோடி என்றும் தமிழகத்தை வஞ்சித்தவர். அதனால் தான் தமிழக மக்களின் கொந்தளிப்பை காட்டும் விதமாக கருப்புக் கொடி காட்டினோம். தன்னை தமிழக மக்கள் பாதுகாப்பார்கள். கோட்சே வாழ்க என்று சொல்லக் கூடிய கூட்டம் தமிழகத்தில் வாலாட்ட முடியாது ‘என்றார்.

முன்னதாக சென்னை விமான நிலையம் வந்த பா.ஜ.க தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ‘பிரதமருக்கு எதிராக எதிர்க்கட்சிகளோ, மக்களோ கருப்புக்கொடி காட்டவில்லை என்றும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்கள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டதை பொறுக்க முடியாத வைகோ கருப்புக் கொடி காட்டினார். வைகோவின் வெற்று அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்’ என்று தெரிவித்தார்.

வைகோ வருகையின் போது  சென்னை விமான நிலையத்தில்  பாஜக தொண்டர்கள் தமிழிசை சவுந்தரராஜனின் அறிவறுத்தலையும் மீறி பாரத் மாதா கீ ஜே என ஆவேசமாக முழக்கமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.