மேகேதாட்டு விவகாரம்: நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர அதிமுக நோட்டீஸ்

 

மேகேதாட்டு விவகாரம்: நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர அதிமுக நோட்டீஸ்

மேகேதாட்டு விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்கு ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர இரு அவைகளிலும் அதிமுக நோட்டீஸ் அளித்துள்ளது

டெல்லி: மேகேதாட்டு விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்கு ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர இரு அவைகளிலும் அதிமுக நோட்டீஸ் அளித்துள்ளது.

கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில் புதிதாக அணை கட்டுவதற்கான ஆரம்பகட்ட பணிகளை தொடங்கியுள்ளது. ஆனால், கர்நாடக அரசு அணைக்கட்டினால் தமிழகத்தில் உள்ள காவிரி டெல்டா பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் வறண்டு போகும் சூழல் உருவாகும். எனவே, கர்நாடக அரசின் அணை கட்டும் முடிவுக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதனிடையே, மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசின் வரைவு திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக அரசு, மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும், இந்த அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் ஒரு மனதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த சூழலில், நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், தமிழக எம்.பி.,-க்கள் மேகேதாட்டு விவகாரத்தை எழுப்புவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படி, மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதிமுக சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. மேகேதாட்டு அணை விவகாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து விவாதிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் அதிமுக எம்.பி., வேணுகோபாலும், மாநிலங்களவை தலைவர் வெங்கைய்யா நாயுடுவிடம் எம்.பி., நவநீத கிருஷ்ணனும் நோட்டீஸ் அளித்துள்ளனர்.

அதேபோல், நாட்டின் உயரிய அமைப்புக்களான ஆர்பிஐ போன்றவை அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருப்பது தொடர்பாக அவசர ஆலோசனை நடத்தும்படி மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஆர்பிஐ விவகாரம், பண மதிப்பிழப்பு விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என காங்கிரஸ் எம்.பி., ராஜ்னீத் ரஞ்சன் மக்களவையில் நோட்டீஸ் அளித்துள்ளார்.