மேகதாது அணை விவகாரம்; திமுக இன்று ஆர்ப்பாட்டம்

 

மேகதாது அணை விவகாரம்; திமுக இன்று ஆர்ப்பாட்டம்

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் திருச்சியில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன.

திருச்சி: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் திருச்சியில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன.

மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு திடீரென ஒப்புதல் அளித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை தமிழகத்திற்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. இதனையடுத்து திமுக தலைமையில் கடந்த 29-ம் தேதி அக்கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் தோழமைக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன.

இந்த கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக டிசம்பர் 4-ம் தேதி திருச்சியில் அனைத்துக்கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும்  கட்சி பேதங்களின்றி அந்த ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் எனவும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கைக்கு அளித்த ஒப்புதலை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளின் ஆர்ப்பாட்டம் இன்று திருச்சியில் நடைபெறுகிறது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தோழமை கட்சியினர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.