மெரினாவில் அதிவேகத்தில் நடந்த பைக் ரேஸ்… இருவர் படுகாயம்; இரண்டு துண்டானது பைக்!
திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த ரஹ்மான் மற்றும் அவரது நண்பர் ஒருவர் ஆர்.கே. சாலையை கடக்க முயன்றுள்ளனர்.
மெரினா கடற்கரையில் பைக் ரேஸ் என்ற பெயரில் அதிவேகத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இளைஞர்கள் செல்வது வழக்கமாகியுள்ளது. அந்த வகையில் மெரினா சாலையில் இன்று அதிகாலை சில இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டுள்ளனர். அப்போது திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த ரஹ்மான் மற்றும் அவரது நண்பர் ஒருவர் ஆர்.கே. சாலையை கடக்க முயன்றுள்ளனர்.
அப்போது அதிவேகமாக வந்த பைக் ஒன்று இருவர் மீது மோதியுள்ளது. இதில் இருவரும் காற்றில் தூக்கி வீசப்பட்டனர். மேலும் இளைஞர் வந்த பைக் இரண்டு துண்டுகளாக விழுந்துள்ளது. இதையடுத்து படுகாயம் அடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்துக்கு காரணமான இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தது கவனிக்கத்தக்கது.