மும்பையில் சுப்ரமணியபுரம் படம் பார்க்கும் பிரபல பாலிவுட் இயக்குநர்!
நடிகர் சசிகுமாரின் சுப்ரமணியபுரம் படத்தை மும்பையில் பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் காண இருக்கிறார்.
சென்னை: நடிகர் சசிகுமாரின் சுப்ரமணியபுரம் படத்தை மும்பையில் பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் காண இருக்கிறார்.
கடந்த 2008-ம் ஆண்டு சசிகுமார் தயாரித்து, இயக்கி நடித்த திரைப்படம் `சுப்ரமணியபுரம்’. இது சசிக்குமாருக்கு முதல் படம். இதில் அவருடன் இணைந்து ஜெய், சமுத்திரக்கனி, சுவாதி , கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.
இது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றதையடுத்து இப்படத்தை அடிப்படையாக வைத்து `கேங்ஸ் ஆஃப் வசிப்பூர்’ என்ற படத்தை இரண்டு பாகங்களாகப் பாலிவுட்டில் அனுராக் காஷ்யப் இயக்கினார். அந்த இரு படங்களும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பந்த்ரா எனும் நகரத்தில் பிவிஆர் குளோபல் மாலில் இன்று மாலை 7.30 மணிக்கு சிறப்புக் காட்சியாகத் திரையிடப்பட இருக்கிறது. இதனை இயக்குநர் அனுராக் காஷ்யப்பும் நேரில் கண்டுகளிக்கவிருக்கிறார். இது குறித்து அனுராக் காஷ்யப் ட்விட்டரில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார் அதில் `மிஸ்பண்ணக்கூடாத படம். நான் கேங்ஸ் ஆஃப் வசிப்பூர் எடுக்க காரணமான படம் என்று பதிவிட்டுள்ளார்.
#Subramaniapuram received accolades in different forms. This is one of the best. Thank you Anurag ji for this honour! #Anuragkashyap #GangsOfWasseypur https://t.co/ogNee02p7J
— M.Sasikumar (@SasikumarDir) February 26, 2019
அதற்குப் பதிலளித்துள்ள சசிகுமார், `பல வகைகளில் `சுப்ரமணியபுரம்’ படத்துக்குப் பாராட்டுகள் வருகின்றன. அதில் இது சிறந்தது. நன்றி அனுராக் ஜி’ என்று தெரிவித்துள்ளார்.