முன்னாள் காதலன் தொல்லை – தூக்கு மாட்டிக் கொண்ட இளம்பெண்
முன்னாள் காதலன் தொந்தரவின் காரணமாக இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நொய்டா நகரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை மதியம் 1.30 மணி அளவில் நொய்டாவைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் தன் கல்லூரி விடுதி அறையில் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார். காவல்துறை விசாரணையில், அவர் தனது முன்னாள் காதலனின் தொந்தரவு காரணமாக தற்கொலை செய்திருப்பது உறுதி ஆகியுள்ளது. அவர்கள் இருவரும் உத்திரபிரதேசம் மாநிலம் ஜான்சி நகரைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் தங்கை, இது பற்றி செய்தியாளர்களிடம் கூறுகையில், அவர் தன் முன்னாள் காதலன் மற்றும் மற்றொரு கல்லூரி நண்பர் ஆகியோருடன் கான்பரன்ஸ் அழைப்பில் பேசிய பின்னரே இந்த முடிவு எடுத்திருப்பதாகத் தெரிவித்தார். அந்த நண்பரிடம் இது பற்றி விசாரிக்கையில், கான்பரன்ஸ் அழைப்பில், குற்றம் சாட்டப்படும் நபர் தன்னிடம் அந்த பெண்ணை எத்தனை நாளகத் தெரியும் என்று கேள்வி எழுப்பியதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், சிறுது நேரம் கழித்து அவரை தனியாக அழைத்த அந்த நபர், அந்தப் பெண்ணை கைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், சென்று பார்க்கும் படியும் கூறியுள்ளார். அப்போது தான் அந்தப் பெண் தூக்கு மாட்டிக் கொண்ட விபரம் தெரிய வந்துள்ளது.
இது பற்றி, அந்தப் பெண்ணின் தந்தை கூறுகையில், “என் பெண் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு கோழை கிடையாது. அவள் மரணத்தில் சந்தேகம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.” முன்னதாக, அந்தப் பெண்ணின் காதலன் அவர் தந்தை பணி புரியும் அலுவலகத்திற்கு சென்று விரும்பத்தகாத புகைப்படங்களைக் காட்டி மிரட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.