முதல் உலகப் போரின் நூற்றாண்டு நினைவு தினம்: உலகத் தலைவர்கள் ஒன்றுகூடி அஞ்சலி!

 

முதல் உலகப் போரின் நூற்றாண்டு நினைவு தினம்: உலகத் தலைவர்கள் ஒன்றுகூடி அஞ்சலி!

முதல் உலகப் போரின் நூற்றாண்டு நினைவு தினத்தையொட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உலகத் தலைவர்கள் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தினர்.

பாரிஸ்: முதல் உலகப் போரின் நூற்றாண்டு நினைவு தினத்தையொட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உலகத் தலைவர்கள் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தினர்.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களின் உயிர்களை காவு வாங்கிய முதல் உலகப் போர் முடிவடைந்து இன்றுடன் நூறாண்டுகள் நிறைவடைகிறது. அந்த போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக உலகின் 70 முக்கிய நாடுகளுடைய தலைவர்கள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் முகாமிட்டனர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விலடிமிர் புதின், இந்திய துணை-ஜனாதிபதி வெங்கையா நாயுடு, கெனடா பிரதமர் ஜஸ்ட்டின் டுருடேயு ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.

கொட்டும் மழையில் குடை பிடித்தபடி, பாரிஸில் அமைக்கப்பட்டுள்ள போர் சின்னமான ‘ஆர்க் டி டிரியோம்பே’ முன்பு ஊர்வலமாக வந்த உலகத் தலைவர்கள் கூடி இருந்தனர். சரியாக காலை 11 மணிக்கு மணி அடித்ததும், முதல் உலகப் போரில் தங்களது இன்னுயிரை நீத்த கோடிக்கணக்கான ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தலைவர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.   

அதன்பின் உருக்கமாக பேசத் தொடங்கிய பிரான்ஸ் அதிபர் இமானுவல் மாக்ரான், “உலகில் பல நாடுகள் இன்று தேசியவாதம் என்ற மனப்போக்கை கடைப்பிடித்து வருகிறது. தேசப்பற்று அல்லது தேசபக்தி என்பது வேறு. தேசியவாதம் என்பது வேறு. இவை இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானவை.

அமைதிக்கான நமது நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் வரலாறு நம்மை சில வேளைகளில் அச்சுறுத்தி வருகின்றது. தற்போது பழைய தீமைகள் மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. முதல் உலகப் போர் விட்டுச்சென்ற தடங்கள் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் இருந்து இன்னும் அழிந்தபாடாக இல்லை.

பருவநிலை மாற்றம், வறுமை, பஞ்சம் மற்றும் ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக போரிடுவதற்கு அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டும். அனைத்துக்கும் மேலாக அமைதிக்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்” என்று பேசியுள்ளார்.