‘முதல்வன் 2’ படத்தில் தளபதி விஜய்?: மனம் திறந்த ஷங்கர்!

 

‘முதல்வன் 2’ படத்தில் தளபதி விஜய்?: மனம் திறந்த ஷங்கர்!

‘முதல்வன் 2’ திரைப்படம் உருவாகும் பட்சத்தில் தளபதி விஜய் கதாநாயகனாக நடிப்பாரா என்ற கேள்விக்கு பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் சுவாரஸ்யமான பதிலை தெரிவித்துள்ளார்.

சென்னை: ‘முதல்வன் 2’ திரைப்படம் உருவாகும் பட்சத்தில் தளபதி விஜய் கதாநாயகனாக நடிப்பாரா என்ற கேள்விக்கு பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் சுவாரஸ்யமான பதிலை தெரிவித்துள்ளார்.

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1999ம் ஆண்டு வெளியான சூப்பர்ஹிட் திரைப்படம் ‘முதல்வன்’. அரசியல் சார்ந்த கதைக்களத்தில் உருவான இப்படத்தில் அர்ஜுன், மனிஷா கொய்ராலா, ரகுவரன், வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஒரு நாள் முதல்வர் கதை என்றைக்கும் தமிழ் ரசிகர்களின் மனதைவிட்டு நீங்காது.

சமீபத்தில் பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த இயக்குநர் ஷங்கர், ‘முதல்வன் 2’ குறித்த சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துக் கொண்டுள்ளார். தற்போதுள்ள அரசியல் சூழலை கவனித்து வருகிறேன். என் மனதை அதிகம் தொல்லை செய்யும் பட்சத்தில் கதையை உருவாக்குவேன். அப்படி ஒரு கதை உருவாகும் பட்சத்தில் நிச்சயமாக ‘முதல்வன் 2’ திரைப்படம் உருவாகும் என ஷங்கர் தெரிவித்துள்ளார்.

‘முதல்வன் 2’ கதைக்கு யார் தேவையோ அவர் தான் ஹீரோ. அது ரஜினி சார், கமல் சார், விஜய் என யாராக இருந்தாலும் கதை அமைந்துவிட்டால் அவர்களுடன் பணியாற்றுவேன் என ஷங்கர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஷங்கர்-விஜய் கூட்டணியில் ‘3 இடியட்ஸ்’ படத்தின் ரீமேக்கான ‘நண்பன்’ படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

சமீபகாலமாக ‘மெர்சல்’, ‘சர்கார்’ போன்ற அரசியல் சார்ந்த திரைப்படங்களில் நடித்து வரும் விஜய் மீது நிஜ அரசியல் களத்திலும் எதிர்ப்பார்ப்பு உள்ளது. இந்நிலையில், தளபதி விஜய் ‘முதல்வன் 2’ படத்தில் நடித்தால் எப்படி இருக்கும்? படம் வெளியாகுமா என்பன போன்ற பல எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.