முதலீட்டாளர்களின் பாக்கெட்டை பதம் பார்த்த பங்குச் சந்தை… ரூ.1.98 லட்சம் கோடி நஷ்டம்.. சென்செக்ஸ் 886 புள்ளிகள் வீழ்ச்சி…

 

முதலீட்டாளர்களின் பாக்கெட்டை பதம் பார்த்த பங்குச் சந்தை… ரூ.1.98 லட்சம் கோடி நஷ்டம்.. சென்செக்ஸ் 886 புள்ளிகள் வீழ்ச்சி…

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் மிகவும் கலவரமாக இருந்தது. சென்செக்ஸ் 886 புள்ளிகள் குறைந்தது.

இன்று காலையில் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவுடனேயே தொடங்கியது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு பொருளாதார தொகுப்பு குறித்து தெரிவித்த தகவல்கள் பங்குச் சந்தை முதலீட்டாளர்களை பெரிய அளவில் ஈர்க்கவில்லை. இது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் படுத்தது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ஹீரோமோட்டோகார்ப், அல்ட்ராடெக் சிமெண்ட், மாருதி, எல் அண்டு டி மற்றும் சன்பார்மா உள்பட மொத்தம் 7 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், டெக்மகிந்திரா, இன்போசிஸ், எச்.டி.எப்.சி. நிறுவனம், இண்டஸ்இந்த் வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் என்.டி.பி.சி. உள்பட மொத்தம் 23 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

ஹீரோமோட்டோகார்ப்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 970 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,358 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 152 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.122.70 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் ஒட்டு மொத்த அளவில் ரூ.1.98 லட்சம் கோடியை இழந்தனர்.

டெக் மகிந்திரா

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 885.72 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 31,122.89 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 240.80 புள்ளிகள் குறைந்து 9,142.75 புள்ளிகளில் முடிவுற்றது.