முடங்கியது மும்பை: உயரும் பலி எண்ணிக்கை!
மும்பையில் கடந்த ஆறு நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. கடந்த இரு நாட்களில் மட்டும் 540 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது
மும்பை: மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாகப் பலியானவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக வெளியாகியுள்ளது.
மும்பையில் கடந்த ஆறு நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. கடந்த இரு நாட்களில் மட்டும் 540 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் காணும் இடமெல்லாம் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலை போக்குவரத்து மட்டுமில்லாமல் விமான ஓடுதள பாதையையும் நீர் சூழ்ந்துள்ளது. மழையால் மக்கள் வீடுகளை விட்டு ரயில் நிலையங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும் 203 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கனமழை காரணமாக பிம்பிரிபாதா என்ற பகுதியில் சுவர் இடிந்து விழுந்து 15 வயது சிறுமி உட்பட 21 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்து நடந்த பகுதியில் தேசிய பேரிடர் குழுவினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக கிழக்கு மலாட் பகுதியில் குடிசைப்பகுதி ஒன்றில் நேற்று அதிகாலை சுவர் இடிந்து விழுந்ததில் 12 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 13 பேர் காயம் அடைந்துள்ளனர். இதே போல் கல்யாண் பகுதியிலுள்ள பள்ளியில் சுவர் இடிந்து விழுந்ததில் 3 பேரும், புனேவில் கல்லூரி ஒன்றில் சுவர் இடிந்ததில் 6 பேரும் பலியாகியுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால், மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளதால் மும்பை மக்கள் பீதியில் உள்ளனர்.