முக அங்கீகார செயலி பயன்பாடு – தொலைந்த குழந்தைகளை குடும்பத்திடம் சேர்த்த தெலங்கானா போலீஸ்!
முக அங்கீகர செயலியை பயன்படுத்தி தொலைந்த குழந்தைகளை மீட்டு பெற்றோரிடம் தெலங்கானா போலீஸ் ஒப்படைத்துள்ளது.
ஹைதராபாத்: முக அங்கீகர செயலியை பயன்படுத்தி தொலைந்த குழந்தைகளை மீட்டு பெற்றோரிடம் தெலங்கானா போலீஸ் ஒப்படைத்துள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் காணாமல் போகின்றனர். மேலும் உணவகங்கள், கைவினைத் தொழில்கள், செங்கல் சூளைகள், தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளர்களாக அவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். அதுதவிர பிச்சை எடுக்க வைத்தல் மற்றும் விபச்சார விடுதிகளுக்கு விற்றல் போன்ற காரியங்களுக்காக நிறைய குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள். இந்த நிலையில், அத்தகைய குழந்தைகளை மீட்பதற்காக ‘ஆபரேஷன் ஸ்மைல்’ என்ற நடவடிக்கையை கடந்த ஜனவரி மாதம் தெலங்கானா போலீஸ் மேற்கொண்டது. இதற்காக முக அங்கீகார செயலியை (facial recognition app) அவர்கள் பயன்படுத்தினர்.
அந்த வகையில் சுமார் 3000-க்கும் அதிகமான கேஸ்களை அலசி ஆராய்ந்து, அதில் ஏராளமான குழந்தைகளை மீட்டு அவர்களின் பெற்றோரிடம் தெலங்கானா போலீஸ் ஒப்படைத்துள்ளனர். இது அம்மாநிலத்தில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளதோடு, இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட போலீசாருக்கு மக்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக பாராட்டுகளை சொல்லி வருகின்றனர். சுமார் 140 கோடி பேர் வாழும் இந்தியாவில் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கண்டுபிடித்து, அவர்களை மீட்டு குடும்பத்தினருடன் மீண்டும் இணைப்பது ஒரு மகத்தான பணி என்று பலர் கூறியுள்ளனர்.