மீ டூ விவகாரம்: சாதி வன்மத்துடன் பேசியதாக அமீருக்கு லக்ஷ்மி ராமகிருஷ்ணன் கண்டனம்!

 

மீ டூ விவகாரம்: சாதி வன்மத்துடன் பேசியதாக அமீருக்கு லக்ஷ்மி ராமகிருஷ்ணன் கண்டனம்!

மீ டூ விவாகரத்தில் தன்னை பற்றி தவறாக சித்தரித்து, சாதி வன்மத்துடன் இயக்குநர் அமீர் பேசியதாக நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

சென்னை: மீ டூ விவாகரத்தில் தன்னை பற்றி தவறாக சித்தரித்து, சாதி வன்மத்துடன் இயக்குநர் அமீர் பேசியதாக நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய மீ டூ பிரசாரத்தின் மூலம் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து வெளிப்படையாக பேசினர். ஹாலிவுட்டை தொடர்ந்து இந்திய சினிமாவில் விஸ்வரூபம் எடுத்த இவ்விவகாரம் தமிழ் திரையுலகிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

கவிஞர் வைரமுத்து-சின்மயி, சுசி கணேசன் – லீலா மணிமேகலை, அர்ஜுன் – ஸ்ருதிஹரன் என நீண்ட இவ்வரிசையில் இயக்குநரும், நடிகையுமான லக்ஷ்மி ராமகிருஷ்ணனும் தனக்கு நேர்ந்த மீ டூ அனுபவம் குறித்து பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில், மீ டூ விவகாரம் குறித்து சமீபத்தில் மேடை ஒன்றில் பேசிய இயக்குநர் அமீர், தமிழ் திரையுலகில் இருக்கும் மீ டூ பற்றி கடுமையாக சாடினார். ராஜலட்சுமி மரணம் குறித்து ஏன் மீ டூ-வில் பேசவில்லை என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அமீரின் கடுமையான பேச்சு தன்னை வருத்தமடைய செய்ததாக நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், ‘தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் பத்திரிக்கை, மற்றும் ஊடக நண்பர்களுக்கு எனது பணிவான வணக்கம், சமீபத்தில் சகோதரர் அமீர் பேசியதை கேட்டேன். என்னை குறிப்பிட்டு சில வார்த்தைகள் விட்டிருக்கிறார். எனது தந்தை மறைந்து போன இந்த தருணத்தில், பகையூட்டும் ஜாதி வன்மம் கொண்ட சகோதரர் அமீர் பேசிய வார்த்தைகள் தான் மிகவும் வேதனை அளிக்கிறது.

அவர் இப்பொழுது தொடுத்த ஜாதி விஷமார்ந்த அம்பு, ஒரு நாள் அவரை நோக்கியும் பாயலாம். கை தட்டல் வாங்குவதற்காக இந்த சமுதாயத்தை எரித்துக்கொண்டு இருக்கும் ஜாதி என்னும் நெருப்பில் எண்ணெய் ஊற்ற வேண்டாம்.

பாதிக்கப்பட்டவர்கள் ஜாதியை பார்த்து நான் குரல் கொடுப்பது இல்லை. என் மீது குற்றம் சாட்டும் சகோதரர்களே, உங்கள் முகத்திலிருந்து ஜாதி சாயம் பூசிய கண்ணாடியை நீக்கிவிட்டு பாருங்கள். பல ராஜலக்ஷிகளுக்காகவும், நந்தினிகளுக்காவும், நான் துடித்து போனதும், குரல் கொடுத்ததும் உங்கள் கண்ணுக்கு தெரியும். மூன்று வருடங்களுக்கு முன்னால், பத்து பெண்களுக்கு பெண்கள் தினத்தன்று பிஜேபி அலுவலகத்தில் ஒரு விருது வழங்கப்பட்டது.

அந்த புகைப்படத்தை இப்பொழுது இணையத்தில் உலவ விட்டு தவறாக சித்தரித்து இருக்கிறார்கள். அதே போல் என்னுடைய மீ டூ ஸ்டோரியை சகோதரர் அமீர் அவர்கள் தவறாக சித்தரித்து பரப்பிக்கொண்டு இருக்கிறார்.

என் தந்தையார் எனக்கு ஜாதி வெறி ஊட்டி வளர்க்கவில்லை. ராஜாஜி அவர்களையும், பெரியார் அவர்களையும் ஒரே மாதிரி நேசித்து, அவர்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகளை எல்லாம் தாண்டி இருவரிடமும் இருக்கும் நல்ல கருத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு வாழ்ந்த தந்தைக்கு பிறந்த மகள் நான். அவர் வகுத்த பாதையில் தான் என்றும் பயணிப்பேன்.