மீண்டும் பரோலை நீடிக்கக்கோரி நளினி மனு : தள்ளுபடிசெய்த சென்னை உயர் நீதிமன்றம்!
இரண்டாவது முறையாக பரோலை நீட்டிக்க நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவானது தள்ளுபடி செய்யப்பட்டது.
சென்னை : இரண்டாவது முறையாக பரோலை நீட்டிக்க நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவானது தள்ளுபடி செய்யப்பட்டது.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி கடந்த ஜூலை மாதம் 25ஆம் தேதி வேலூர் மத்திய சிறையிலிருந்து, பரோலில் வெளியே வந்தார். வேலூரில் அவரது உறவினர் வீட்டில் தங்கியுள்ள அவர் மகள் திருமண ஏற்பாடுகளைக் கவனித்து வருகிறார். அதே சமயம் சிறைத்துறை விதிமுறைகளின்படி சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வருகிறார்.
இதனிடையே நளினி மேலும் ஒருமாதம் பரோலை நீட்டிக்கக் கோரி தமிழக அரசிடமும், சிறைத் துறையிடமும் ஆகஸ்ட் 8ஆம் தேதி மனு அளித்தார்.ஆனால் அவரது மனு ஆகஸ்ட் 13ல் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி புதிதாக ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் இந்த உத்தரவை ரத்து செய்து, பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அதன்படி கடந்த 22ஆம் தேதி நளினிக்கு பரோலை 3 வாரங்கள் நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து மீண்டும் இரண்டாவது முறையாக பரோலை நீட்டிக்க நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் மகளின் திருமண வேலைகள் இன்னும் முடியாதநிலை பரோலை நீட்டிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.இந்நிலையில் இம்மனு மீதான வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள், ‘ ஏற்கெனவே 7 வாரங்கள் பரோல் அளித்திருந்த நிலையில் மீண்டும் 4 வாரம் நீட்டிக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர். இதனால் நளினியின் பரோல் வரும் 15ஆம் தேதி மாலை 6 மணிக்கு முடிய உள்ளது.