மீண்டும் பரோலில் வருகிறார் சசிகலா?

 

மீண்டும் பரோலில் வருகிறார் சசிகலா?

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறைத் தண்டனை அனுபவித்து வரும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா பரோலில் வரவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறைத் தண்டனை அனுபவித்து வரும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா பரோலில் வரவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா. சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் ஜெயலலிதா உடன் போயஸ் கார்டன் வீட்டில் இருந்தவர். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வின் தற்காலிக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்பு சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்டதால் சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அடைக்கப்பட்டார். அவரை டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அவ்வப்போது சிறையில் சென்று சந்தித்து வருகின்றனர்.

இதனிடையே, சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான நடராசன் உடல் நலக்குறைவால் கடந்த மார்ச் மாதம் சென்னையில் காலமானார். அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காகச் சிறையிலிருந்து சசிகலா, நிபந்தனைகளுடன் 15 நாட்கள் பரோலில் வந்தார். அவரை முக்கிய பிரமுகர்கள் பலர் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இந்நிலையில், சசிகலா மீண்டும் பரோலில் வரவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்போது, குடும்ப உறுப்பினர்களிடையே உள்ள பிரச்னைகள், சொத்துகள் தொடர்பான பிரச்னை, தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் உள்ளிட்டவைகள் குறித்து சசிகலாவிடம் ஆலோசனை நடத்தப்படும் என தெரிகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் வருகிற 5-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அதற்கு முன்பேகூட அவரது வருகை இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.