‘மீண்டும் சிம்புவுடன் தொடங்கவுள்ள மாநாடு’ : ரசிகர்களுக்கான அப்டேட் இதோ!
‘மகாமாநாடு’ என்ற படம் உருவாகும் என்றும் சிம்பு சினி ஆர்ட்ஸ் மூலம் இப்படத்தைத் தயாரிப்பேன் என்றும் சிம்புவின் தந்தையும் இயக்குநருமான டி. ராஜேந்திரன் அறிவித்தார்.
மாநாடு படத்தில் மீண்டும் நடிகர் சிம்பு நடிப்பதற்காகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்கவுள்ளதாகத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார். அதற்காக வெளிநாடு சென்று கடும் பயற்சியெடுத்து தனது உடல் எடையைப் பாதியாகக் குறைத்துக் கொண்டு வந்தார் சிம்பு. ஆனால் மாநாடு படத்தில் நடிக்காமல் மஃபிடி படத்தில் நடிக்க சென்று விட்டதால் மாநாடு படத்தின் ஷூட்டிங் தொடங்க தாமதமானது. அதனால் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, சிம்பு இந்த படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகச் சமீபத்தில் அறிவித்தார். முழுக்க முழுக்க சிம்புவின் அரசியல் ட்ரீட்டாக இருக்கும் என்று காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு இந்த செய்தி மிகவும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து போட்டி படமாக சிம்பு நடிப்பில் ‘மகாமாநாடு’ என்ற படம் உருவாகும் என்றும் சிம்பு சினி ஆர்ட்ஸ் மூலம் இப்படத்தைத் தயாரிப்பேன் என்றும் சிம்புவின் தந்தையும் இயக்குநருமான டி. ராஜேந்திரன் அறிவித்தார்.
#STR மீண்டும் #மாநாடு படத்தில் நடிப்பதற்காக பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. மிகுந்த திறமைசாலியும்… இன்னும் பெரிய உயரம் செல்ல வேண்டிய தமிழ் நடிகரும் கூட. முக்கிய இடம்பிடித்து வெல்வார் மாநாட்டில்! மகிழ்ச்சியும் அன்பும்!! @STRhere @sureshkamatchi @vp_offl#WelcomeBackSTR ❤ pic.twitter.com/dIDjSu6NeB
— A. JOHN- PRO (@johnmediamanagr) October 21, 2019
இந்நிலையில் சிம்பு மீண்டும் மாநாடு படத்தில் நடிப்பதற்காகப் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மாநாடு படத்திற்காகச் சிம்பு ஏற்கனவே 2 கோடி ரூபாய் முன்பணம் வாங்கியதாகத் தகவல் வெளியான நிலையில் அவரை படப்பிடிப்புக்கு அனுப்புவதாக அவரது தாய் உஷா உறுதியளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல் வெங்கட் பிரபுவும் சிம்பு தவறாமல் ஷூட்டிங் வந்தால் படத்தை இயக்குவதற்குத் தயாராக உள்ளேன் என்று கூறியுள்ளாராம். இதனால் விரைவில் மாநாடு திரைப்படம் சிம்புவுடன் ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.