மீண்டும் ஒரு இளம் பெண் எரித்துக் கொலை… திருச்சியில் தொடரும் அசம்பாவிதம்!

 

மீண்டும் ஒரு இளம் பெண் எரித்துக் கொலை… திருச்சியில் தொடரும் அசம்பாவிதம்!

திருச்சியில் இளம் பெண் ஒருவர் சாலை அருகே எரித்து கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சியடைய வைத்தது. அந்த சம்பவம் நடந்து சில வாரங்களே ஆன நிலையில், திருச்சியில் தேசிய நெடுஞ்சாலை அருகே 25 வயது மதிக்கத்தக்க பெண் உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

burnt

திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பாத்திமா நகர் அருகே இன்று காலை இளம் பெண் ஒருவரின் சடலம் எரிந்த நிலையில் இருப்பதை மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே, விரைந்துவந்து உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கொலை செய்யப்பட்ட பெண் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என எந்த ஒரு விவரமும் தெரியவில்லை. இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் காணாமல் போன இளம் பெண்கள் பற்றிய தகவலை கேட்டு ஒப்பிட்டு ஆய்வு நடத்தி வருகின்றனர்.

police

திருச்சியில் தேசிய நெடுஞ்சாலை வனப் பகுதிகளில் அவ்வப்போது கொலைகள் நடந்ததாக செய்திகள் வெளியாகிக்கொண்டே இருக்கிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். கடந்த மாதம் கார்களை வாங்கி விற்பனை செய்துவந்த தொழிலதிபர் காரில் வைத்தே எரித்துக் கொல்லப்பட்டார். இது போன்று பல சம்பவங்கள் பதிவாகிக்கொண்டே இருக்கிறது. இதைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.