மீண்டும் ஆதிக்கம் செலுத்திய காளை! சென்செக்ஸ் 95 புள்ளிகள் உயர்ந்தது

 

மீண்டும் ஆதிக்கம் செலுத்திய காளை! சென்செக்ஸ் 95 புள்ளிகள் உயர்ந்தது

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று ஆரம்பம் முதலே வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 95 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் நேற்று வர்த்தகம் முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. ஆனால் இன்று பங்கு வர்த்தகம் நல்ல ஏற்றம் கண்டது. பஜாஜ் ஆட்டோ, ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் சிறப்பாக இருந்தது. ஐ.டி. மற்றும் வங்கி துறைகளை சேர்ந்த நிறுவன பங்குகளுக்கு நல்ல தேவை இருந்ததும் பங்குச் சந்தைகளின் ஏற்றத்துக்கு வலு சேர்த்தது. 

எச்.டி.எப்.சி. நிறுவனம்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் நிறுவன பங்குகளில் எச்.சி.எல். டெக்னாலஜிஸ், மாருதி, ஸ்டேட் வங்கி, எச்.டி.எப்.சி. நிறுவனம், பஜாஜ் ஆட்டோ மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் உள்பட 19 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேசமயம், பார்தி ஏர்டெல், வேதாந்தா, ஓ.என்.ஜி.சி., ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், கோடக்மகிந்திரா வங்கி மற்றும் யெஸ் வங்கி உள்பட 11 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,223 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,262 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. இருப்பினும் 202 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.149.57 லட்சம் கோடியாக உயர்ந்தது. 

பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 94.99 புள்ளிகள் உயர்ந்து 39,058.83 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 15.75 புள்ளிகள் உயர்ந்து 11,604.10 புள்ளிகளில் முடிவுற்றது.