மீண்டும் அள்ளிக் கொடுத்த பங்கு சந்தை…. முதலீட்டாளர்களுக்கு ரூ.68 ஆயிரம் கோடி லாபம்…

 

மீண்டும் அள்ளிக் கொடுத்த பங்கு சந்தை…. முதலீட்டாளர்களுக்கு ரூ.68 ஆயிரம் கோடி லாபம்…

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 371 புள்ளிகள் உயர்ந்தது.

தொடர்ந்து 2வது நாளாக இன்றும் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்றாக இருந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு வர்த்தகத்தின் இடையே சற்று உயர்ந்தது. அமெரிக்க பங்குச் சந்தைகளில் நேற்று வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது. அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலித்தது போன்ற பல காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது.

இண்டஸ்இந்த் வங்கி

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், இண்டஸ்இந்த் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், எச்.டி.எப்.சி. நிறுவனம், ஆக்சிஸ் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் மகிந்திரா அண்டு மகிந்திரா உள்பட 17 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், சன்பார்மா, நெஸ்லே இந்தியா, என்.டி.பி.சி., எச்.சி.எல். டெக்னாலஜிஸ் உள்பட 13 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சன்பார்மா

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,304 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,059 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 192 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.124.14 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.68 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 371.44 புள்ளிகள் உயர்ந்து 32,114.52 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 98.60 புள்ளிகள் ஏற்றம் கண்டு 9,380.90 புள்ளிகளில் நிலைகொண்டது.