மின்திருட்டுக்கு வருது ஆப்பு; கட்டாய ‘ப்ரீபெய்டு’ மின் மீட்டர் அறிமுகம்

 

மின்திருட்டுக்கு வருது ஆப்பு; கட்டாய ‘ப்ரீபெய்டு’ மின் மீட்டர் அறிமுகம்

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அனைத்து வீடுகள், நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மின் இணைப்புகளுக்கும் ப்ரீபெய்டு மின் மீட்டர்கள் கட்டாயம் பொருத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதுதில்லி: 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அனைத்து வீடுகள், நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மின் இணைப்புகளுக்கும் ப்ரீபெய்டு மின் மீட்டர்கள் கட்டாயம் பொருத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுபோன்று ப்ரீபெய்டு மின் மீட்டர்கள் பொருத்துவதனால் மின்விநியோக நிறுவனங்களுக்கு முன்கூட்டியே வருவாய் வரும் என்பதாலும், இதன்மூலம் மின்திருட்டை வெகுவாக குறைத்துவிடலாம் என மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இணையமைச்சர் ஆர்.கே.சிங் கூறியுள்ளார்.

இந்த அதிரடி திட்டத்தினால் மின் கட்டண பில் குளறுபடிகள், திருட்டு ஆகியவற்றை தடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் இந்தத் திட்டம் அறிமுகமாகிறது. 

மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்வது போல மின்கட்டணத்தையும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதனால் ரீசார்ஜ் செய்யப்பட்டவரை பயன்படுத்தியபின் மீண்டும் ரீசார்ஜ் செய்தால்தான் கரண்ட் வரும். இந்தத் திட்டம் நிச்சயம் மின்சாரம் திருடுபவர்களுக்கு மிகப் பெரிய ‘ஷாக்’ அடிக்கும் என்கிறார் அமைச்சர்.

இந்தப் புதிய ப்ரீபெய்டு ஸ்மார்ட் மீட்டர்கள் அன்றாடம் ஒருவர் பயன்படுத்தும் மின் அளவு, எந்த நேரத்தில் அதிகமாக செலவாகிறது என்ற விவரத்தை தெரியப்படுத்தும். இதை வைத்து நுகர்வோர் தங்களது பயன்பாட்டை சிக்கனமாக்க திட்டமிடும் வாய்ப்பும் உள்ளது.