மாற்றுத் திறனாளிகள் குறித்து அமைச்சரின் சர்ச்சை பேச்சு: ஸ்ரீப்ரியா பதிலடி!

 

மாற்றுத் திறனாளிகள் குறித்து அமைச்சரின் சர்ச்சை பேச்சு: ஸ்ரீப்ரியா பதிலடி!

மக்கள் நீதி மய்யம் கட்சியை கருவிலேயே கலைக்கப்பட வேண்டிய சப்பாணி குழந்தை என அமைச்சர் பேசியதற்கு ஸ்ரீப்ரியா பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியை கருவிலேயே கலைக்கப்பட வேண்டிய சப்பாணி குழந்தை என அமைச்சர் பேசியதற்கு ஸ்ரீப்ரியா பதிலடி கொடுத்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற புதிய கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். அந்த கட்சியை தொடங்குவதற்கு முன்பிருந்தே அவருக்கும், ஆளும் அதிமுக அமைச்சர்களுக்கும் இடையே கடுமையான வார்த்தை போர் நிலவி வருகிறது. 

இந்நிலையில், நேற்று காலை நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “கமல்ஹாசனின் கட்சி கருவிலேயே கலைக்கப்பட வேண்டிய சப்பாணி குழந்தை. அந்த கட்சி வளர்ந்தால் தமிழக மக்களுக்கு பெரும் ஆபத்து உண்டாகும். வெளிநாட்டு தீய சக்திகளோடு கமல் பயணிக்கிறாரா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. தமிழகத்தை காக்க வந்த ரட்சகர் போல் கமல்ஹாசன் நாடகம் நடத்துகிறார், அது தேர்தலுக்கு ஒத்துவராது” என பேசியிருந்தார். 

இதற்கு ஏற்கனவே கமல்ஹாசன் பதிலடி கொடுத்திருந்த நிலையில் அக்ட்சியின் உயர்மட்ட நிர்வாகியாக இருக்கும் நடிகை ஸ்ரீப்ரியா இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், அமைச்சருக்கு பதிலடி கொடுத்துள்ளார். 

அதில், “தாய்மையின் பெருமை அறியாதவர் போலும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள். மாற்றுத்திறமை கொண்டவர்கள், தேசிய விருது பெறும் திறமை கொண்டவர்கள். ஒரு சிலரின் வளர்ச்சி போல மாற்றுத்திறனாளிகள் வளர்வதால் மக்களுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை. அவர்கள் கருணையும் அன்பும் நிறைந்தவர்கள்” என பதிலடி கொடுத்துள்ளார்.