மாறாத வடு…மறையாத காயம்; குருதியும் கண்ணீரும் கலந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை!

 

மாறாத வடு…மறையாத காயம்; குருதியும் கண்ணீரும் கலந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை!

உத்தரவு குறித்து பொதுமக்கள் அறிந்திருக்கவில்லை. அவர்கள் கைகளில் ஆயுதங்கள் எல்லாம் இருக்கவில்லை. இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், பெண்கள், குழந்தைகள் என சுமார் 15,000-க்கும் மேற்பட்டோர் அங்கு கூடியிருந்தனர்

ரத்தமும், கண்ணீரும் கலந்து எழுதப்பட்ட இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் மாறாத வடுவாக இன்றும் இருப்பது ஜாலியன் வாலாபாக் படுகொலை. ஜாலியன் வாலாபாக் படுகொலை நடைபெற்று இன்றுடன் 100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. மிகச் சரியாக நூறாண்டுக்கு முன்பு இதே ஏப்ரல் மாதம், இதே நாளில் இந்திய சரித்திரத்தின் முகத்தில் கருப்பு மை பூசிய அந்நிகழ்வு அரங்கேறியது.

jallianwala bagh

கடந்த 1919-ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி அரங்கேறியது. வெள்ளை காலனியாதிக்கத்தால் ஏவி விடப்பட்ட துப்பாக்கிக் குண்டுகள் ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் அப்பாவி மக்களின் உயிர்களை கொன்று குவித்தது.

பஞ்சாப்பின் அமிர்தசரஸ் நகரில், சீக்கியர்களின் பொற்கோவிலுக்கு 400 மீட்டர் தொலைவில்  உள்ள ஜாலியன் வாலாபாக் என்ற பூங்காவில், ‘பைசாகி’ திருவிழாவைக் கொண்டாட சுற்றுவட்டார பகுதி மக்கள் திரண்டனர். அதற்கு முன்னதாக, முறையான அனுமதியின்றிப் போராட்டம் நடத்தக் கூடாது என்ற உத்தரவை பிரிகேடியர் ஜெனரல் ரெஜினால்ட் டயர் பிறப்பித்திருந்தார்.

jallianwala bagh

ஆனால், அந்த உத்தரவு குறித்து பொதுமக்கள் அறிந்திருக்கவில்லை. அவர்கள் கைகளில் ஆயுதங்கள் எல்லாம் இருக்கவில்லை. இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், பெண்கள், குழந்தைகள் என சுமார் 15,000-க்கும் மேற்பட்டோர் அங்கு கூடியிருந்தனர்.

அவர்கள் அனைவரும் திருவிழாவை கொண்டாட வந்தவர்களாகவோ அல்லது இந்தியர்களின் பேச்சுரிமை உள்பட அனைத்து உரிமைகளையும் பறிக்கும் கொடிய ரவுலட் சட்டத்தை எதிர்த்தும், ஏற்கனவே இந்த சட்டத்தை எதிர்த்து போராடியவர்கள் கைது செய்யப்பட்டது, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு கொல்லப்பட்டது ஆகியவற்றை கண்டித்தும் நடந்த அகிம்சை கூட்டத்தில் இடம் பெற்ற அரசியல் உரைகளை கேட்க வந்தவர்களாகவோ அல்லது பூங்காவில் சில மணி நேரங்கள் செலவிடவோ வந்தவர்கள்.

jallianwala bagh

அது என்ன நிகழ்ச்சி என்பதைக் கூடத் தெரிந்துகொள்ள விரும்பாத ஜெனரல் டயர், மக்களுக்கு எச்சரிக்கை எதுவும் விடுக்காமல், துப்பாக்கிச் சூடு நடத்த ஆணையிட்டார். அந்த மைதானத்தின் நான்கு பக்கமும் மதில் சுவர்.  உள்ளே செல்ல ஒரே ஒரு சின்ன பாதை மட்டுமே. அதிலும், காவலர்களும், குண்டுகள் நிரப்பிய பீரங்கிகளும் நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த இடத்திலிருந்து மக்களால் தப்பிக்க முடியவில்லை.

jallianwala bagh

டயரின் ஆணைப்படி, ஒரே சமயத்தில் 90 துப்பாக்கிகள் சரமாரியாக குண்டு மழை பொழிந்தன. சுமார் 1,650 முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. ஜெனரல் டயர் துப்பாக்கிச்சூடை நிறுத்த உத்தரவிட்டபோது, ஜாலியன்வாலாபாக் மைதானம், இறந்த உடல்களால் நிறைந்திருந்த போர்களம் போல காட்சியளித்தது. இதில் சிக்கி 379 பேர் உயிரிழந்ததாகவும், 1,137 பேர் காயமடைந்ததாகவும் கூறியது அப்போதைய வெள்ளை ஆதிக்க அரசு. ஆனால், உண்மையில் இதன் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம்.

இந்நிலையில், ஜாலியன் வாலாபாக் படுகொலையின் 100-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, ஜாலியன் வாலாபாக் படுகொலை  நடைபெற்று இன்றுடன் 100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. சுதந்திர போராட்ட வீரர்களின் உயிர் தியாகத்தை இந்தியா ஒருபோதும் மறக்காது என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஜாலியன் வாலாபாக் படுகொலையில் உயிரிழந்தவர்களின் தியாகம் ஒருபோதும் மறக்கப்படாது. நாட்டின் முன்னேற்றத்துக்கு மேலும் கடுமையாக உழைக்க ஜாலியன் வாலாபாக் நினைவு உத்வேகம் அளிக்கிறது என பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஜாலியன் வாலாபாக் படுகொலையின் 100-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு பஞ்சாப் மாநிலம், அமிர்தசரசில் அமைந்துள்ள ஜாலியன் வாலாபாக் நினைவு இடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சுதந்திரத்திற்கான விலை ஒருபோதும் ஒருநாளும் மறக்கப்படாது. சுதந்திரத்திற்காக, தங்களிடம் உள்ள அனைத்து சக்தியையும் கொடுத்த இந்திய மக்களை வணங்குகிறோம் என அங்குள்ள பார்வையாளர்கள் புத்தகத்தில் எழுதியுள்ளார்.

இதேபோல் இந்தியாவுக்கான பிரிட்டன் தூதர் டோமினிக்கும் ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அதன்பின்னர், பார்வையாளர்கள் புத்தகத்தில், ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம், பிரிட்டிஷ் – இந்திய வரலாற்றில் வெட்கக்கேடான செயல் என குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இதற்கு பிரிட்டன் அரசு வருத்தம் தெரிவித்ததையும் அவர் அப்போது சுட்டிக் காட்டினார்.

theresa may

முன்னதாக, ஜாலியன் வாலாபாக் படுகொலையின் 100-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, பிரிட்டன் அரசு வருத்தம் தெரிவித்தது. பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் தெரசா மே ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு கடந்த 10-ம் தேதியன்று வருத்தம் தெரிவித்து பேசினார். படுகொலைக்கும் அதனால் ஏற்பட்ட துயரங்களுக்கும் வருந்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிங்க

பாண்டிச்சேரி என்றால் உங்களுக்கு ‘மற்றது’ அத்தனையும் ஞாபகத்துக்கு வருதுல்ல…இதப்பத்தி எதாவது தெரியுமா..!