மாநில அரசுகளின் கடன் பெறும் உச்சவரம்பு 5 சதவீதமாக அதிகரிப்பு – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
மாநில அரசுகளின் கடன்பெறும் உச்சவரம்பு 5 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டு இருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
டெல்லி: மாநில அரசுகளின் கடன்பெறும் உச்சவரம்பு 5 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டு இருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சனைகளை சரிசெய்ய சுயசார்பு திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதையடுத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நான்கு கட்டமாக அந்த நிதி ஒதுக்கீடு குறித்த விவரங்களை அறிவித்தார். நேற்று தனது நான்காவது உரையில் அவர் பேசுகையில் நிலக்கரி, தாதுக்கள் பாதுகாப்பு உற்பத்தி, வான்வெளி மேலாண்மை, எம்.ஆர்.ஓக்கள் மின் விநியோக நிறுவனங்கள், விண்வெளி துறைகள், அணுசக்தி ஆகிய துறைகளில் பொருளாதார கட்டமைப்பு சீர்திருத்தங்களை நிதியமைச்சர் அறிவித்தார்.
இந்த நிலையில், இன்று ஐந்தாவது கட்டமாக ரூ.20 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு குறித்த விவரங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதன்படி நிலம், தொழிலாளர் நலன், பணப் புழக்கம் தொடர்பான நிதி ஒதுக்கீடுகள் குறித்து அவர் அறிவித்தார். அப்போது நிதியமைச்சர் கூறுகையில், “மாநில அரசுகளின் கடன் பெறும் உச்சவரம்பு 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் அரை சதவிகிதம் கடன் வாங்க எந்த கட்டுப்பாடும் கிடையாது. அடுத்த 1 சதவிகிதம் (3.5-ல் இருந்து 4.5 சதவீதம்) கடன் வாங்கும் பணத்தில் ஒரே நாடு ஒரே ரேசன், மின்சார பங்கீடு உள்ளிட்ட நான்கு துறைகளுக்கு பயன்படுத்தப்பட வேண்டும். குறைந்தது மூன்று துறைகளில் பயன்படுத்தினால் மட்டுமே கடைசி அரை சதவிகிதம் கடன் பெற மாநில அரசுகளுக்கு அனுமதி வழங்கப்படும். மாநில அரசுகள் இந்த கடன் பெறும் இந்த வசதி 2020-2021-ஆம் ஆண்டுகளுக்கு மட்டுமே நடைமுறையில் இருக்கும்” என்றார்.