மாதவரம் பயங்கர தீ விபத்தால் அபாயகரமான காற்று மாசுபாடு ஏற்படவில்லை!
மாதவரம் ரவுண்டானா பகுதி பகுதியில் செயல்பட்டு வரும் ரசாயன கிடங்கில் நேற்று பிற்பகல் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
திருவள்ளூர் மாதவரம் ரவுண்டானா பகுதி பகுதியில் செயல்பட்டு வரும் ரசாயன கிடங்கில் நேற்று பிற்பகல் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கொழுந்து விட்டு எரிந்த அந்த தீயால் கரும்புகை சூழ்ந்தது. தீயைக் கட்டுக்குள் கொண்டு வர 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 15 மணி நேரத்திற்கு மேலாகத் தீயைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது விமான நிலையங்களில் பயன்படுத்தப்படும் ஸ்கைலிப்ட் இயந்திரத்தைக் கொண்டு தீ அணைக்கும் பணி நடைபெற்றது. அங்கிருந்த மக்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப் பட்டதால் அதிர்ஷ்டவசமாக எந்த வித உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை.
இந்நிலையில் இந்த பயங்கர தீ விபத்து பற்றிப் பேசிய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாஜலம், “இந்த விபத்தால் ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றி மக்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். அபாயகரமான அளவிற்குக் காற்று மாசுபாடு ஏற்படவில்லை. காற்றின் தரம் குறித்து மணலியில் உள்ள ஆய்வு மையம் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. 5க்கும் மேற்பட்ட வாரிய அலுவலர்கள் சம்பவ இடத்தில் இருக்கின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.